Published : 27 May 2023 05:17 AM
Last Updated : 27 May 2023 05:17 AM

சீனாவில் புதிய கரோனா அலை தீவிரம் - வாரத்துக்கு 6.5 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை

பெய்ஜிங்: கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் பகுதியில் கரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. அங்கிருந்து 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

தற்போது கரோனா வைரஸ் பரவல் குறைந்திருப்பதால் சர்வதேச அளவிலான பொது சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு நீக்கியிருக்கிறது. எனினும் கரோனா பெருந்தொற்று முழுமையாக ஓயவில்லை. நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் முன்னாள் விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் உள்ளிட்டோர் அறிவுறுத்தியுள்ளனர். இந்த சூழலில் கடந்த ஏப்ரல் இறுதியில் தொடங்கி சீனா முழுவதும் கரோனாவின் ஒமிக்ரான் எக்ஸ்.பி.பி. வகை வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. தற்போது வாரத்துக்கு 4 லட்சம் பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. வரும் ஜூன் மாதத்தில் சீனாவில் கரோனா தொற்று உச்சத்தை எட்டும். அப்போது வாரத்துக்கு 6.5 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்படும் என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.

இதுகுறித்து பெய்ஜிங் பல்கலைக்கழக மருத்துவமனையில் பணியாற்றும் மூத்த மருத்துவர் வாங் குவாங்பா கூறும்போது, “சீனாவில் புதிய கரோனா அலை ஏற்பட்டிருப்பது உண்மைதான். ஆனால் அதன் பாதிப்பு மிதமாகவே உள்ளது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கிறது" என்று தெரிவித்தார்.

சீனாவின் நுரையீரல் தொற்று நிபுணர் ஜாங் நான்ஷான் கூறும்போது, “ஒமிக்ரான் எக்ஸ்.பி.பி. வகை கரோனா வைரஸை எதிர்கொள்ள புதிதாக 2 தடுப்பூசிகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். விரைவில் மேலும்4 தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.

இதுகுறித்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த சுகாதாரத் துறை நிபுணர்கள் கூறியதாவது: சீனாவில் தற்போது மரபணு மாறிய கரோனா வைரஸை எதிர்கொள்ள புதிய தடுப்பூசிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர அந்த நாடு முயற்சி செய்து வருகிறது.

எனவே சீனாவில் இருந்து ஒமிக்ரான் எக்ஸ்.பி.பி. வைரஸ் உலக நாடுகளுக்கு பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சீனாவின் அண்டை நாடுகள் உட்பட அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டி யது அவசியம். இவ்வாறு சர்வதேசசுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் புதிய கரோனா அலை ஏற்பட்டிருப்பதால் சீனா, ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x
News Hub
Icon