Published : 20 May 2023 04:47 PM
Last Updated : 20 May 2023 04:47 PM

ஜப்பானின் ஹிரோஷிமாவில் காந்தியின் மார்பளவு சிலை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையைத் திறந்துவைத்த பிரதமர் மோடி

ஹிரோஷிமா (ஜப்பான்): ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) திறந்து வைத்தார்.

ஹிரோஷிமாவில் 19 முதல் 21-ம் தேதி வரை நடைபெறும் ஜி-7 உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி ஜப்பான் சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது, இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான நட்பு மற்றும் நல்லெண்ணத்தின் அடையாளமாக ஹிரோஷிமா நகருக்கு மகாத்மா காந்தியின் மார்பளவுச் சிலை இந்திய அரசால் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

42 அங்குல உயரமுள்ள வெண்கல மார்பளவுச் சிலையை பத்ம பூஷன் விருது பெற்ற ராம் வஞ்சி சுதார் வடிவமைத்துள்ளார். இந்த சிலை ஜப்பானின் மோட்டோயாசு ஆற்றை ஒட்டி, தினமும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வரும் அணுகுண்டு நினைவுச் சின்னம் கட்டிடத்துக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது.

அமைதி மற்றும் அகிம்சைக்கான ஒற்றுமையின் அடையாளமாக இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தனது வாழ்க்கையை அமைதி மற்றும் அகிம்சைக்காக அர்ப்பணித்தார். இந்த இடம் உண்மையிலேயே காந்தியின் கொள்கைகள் மற்றும் வாழ்க்கையுடன் எதிரொலிக்கும் விதமாகவும், இது உலகையும் அதன் தலைவர்களையும் தொடர்ந்து ஊக்குவிக்குவிக்கும் விதமாகவும் அமைந்துள்ளது.

இந்த சிலை திறப்பு விழாவின்போது, பிரதமரின் சிறப்பு ஆலோசகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நகாதானி ஜென், ஹிரோஷிமா நகர மேயர் கசுமி மட்சுயி, ஹிரோஷிமா நகர சட்டமன்றத்தின் சபாநாயகர் தட்சுனோரி மோட்டானி, ஹிரோஷிமாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூத்த அரசு அதிகாரிகள், இந்திய சமூக உறுப்பினர்கள், ஜப்பானில் மகாத்மா காந்தியைப் பின்பற்றுபவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x