Published : 12 Apr 2023 07:10 AM
Last Updated : 12 Apr 2023 07:10 AM

எல்லைப் பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் சட்டவிரோதமாக ஆயுதங்களை விநியோகிக்கிறது பாகிஸ்தான்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா குற்றச்சாட்டு

கோப்புப்படம்

நியூயார்க்: சர்வதேச சட்ட விதிமுறைகளை மீறி, எல்லைப் பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களும், வெடிபொருட்களும் விநியோகிக்கப்படுவது, இந்தியாவுக்கு மிகவும் சவாலான பணியாக உள்ளது என ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் ருச்சிரா கம்போஜ் தெரிவித்தார்.

‘‘ஆயுத ஏற்றுமதி ஒப்பந்த விதிமுறை மீறலால், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல்’’ என்ற தலைப்பிலான விவாதம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் இந்தியா சார்பில் ருச்சிரா கம்போஜ் பேசியதாவது:

ஆயுத பரவல் ஒப்பந்தத்தில் தெளிவற்ற கொள்கைகளை உடைய நாடுகள் தீவிரவாதிகளுடன் கைகோர்க்கின்றன. சர்வதேச சட்ட விதிமுறைகளை மீறி ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்வது, பதற்றத்தை அதிகரிக்கிறது. இந்த நாடுகளின் ஆதரவு இல்லாமல், தீவிரவாதிகளுக்கு தரமான ஆயுதங்கள் கிடைக்காது.

இந்திய எல்லைகளில் ட்ரோன்கள் மூலம் ஆயுதங்கள் சட்டவிரோதமாக விநியோகிக்கப்படுவதை தடுப்பது மிகவும் சவாலான பணியாக உள்ளது. இந்தியாவின் எல்லை அருகேயுள்ள பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நாட்டின் ஆதரவு இல்லாமல், இது போன்ற செயல்களுக்கு சாத்தியமில்லை. எல்லையில் ஆயுதங்களை சுமந்து வரும் பாகிஸ்தான் ட்ரோன்களை இந்திய பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்துகின்றனர். சமீபத்தில் ஜம்மு எல்லையில் பாகிஸ்தான் ட்ரோனை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். கடந்த மார்ச் மாதம் முதல் இரண்டாவது முறையாக இச்சம்பவம் நடந்துள்ளது. இது போன்ற நாடுகளுக்கு சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவிக்க வேண்டும். இது போன்ற தவறான செயல்களுக்கு அவர்களை பொறுப்பேற்க வைக்க வேண்டும். இவ்வாறு ருச்சிரா கம்போஜ் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x