Published : 21 Dec 2022 01:30 AM
Last Updated : 21 Dec 2022 01:30 AM

ஆப்கானிஸ்தான் | பல்கலைக்கழகங்களில் பயில மாணவிகளுக்கு தடை விதித்தது தலிபான்

காபூல்: ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், அங்கு பெண்களுக்கு எதிராக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. தலிபான்களின் ஓராண்டு ஆட்சியில் அடிப்படைவாதம் தலைதூக்கி, பெண்களின் உரிமைகள் முழுமையாகப் பறிக்கப்பட்டுள்ளன.

புர்கா அணியாமல் வெளியே செல்லும் பெண்களின் தலை துண்டிக்கப்படுகிறது. நெயில் பாலிஷ் செய்தால் விரல்கள் வெட்டப்படுகின்றன. வேறு ஆண்களுடன் பேசினால் பொது இடத்தில் பெண்கள் கல்லெறிந்து கொல்லப்படுகின்றனர். முந்தைய ஆட்சியில் அலுவலக பணிக்குச் சென்ற பெண்கள் இப்போது வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். கடந்த மார்ச் மாதம் 5-ம் வகுப்புக்கு மேல் மாணவிகள் கல்வி பயில தடை விதித்தனர். இதன்படி மகளிருக்கான நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன.

இதற்கு உலக நாடுகள் கடும் எதிர்வினை ஆற்றிய பின் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. இப்போது ஆப்கனில் மீண்டும் பெண்கள் கல்வி பயில தடை விதிக்கப்பட்டு இருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி பயில தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை மாணவிகள் கல்லூரிகளுக்கு நுழைய கூடாது என்று ஆப்கானிஸ்தான் உயர்கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x