Published : 19 Sep 2022 05:09 AM
Last Updated : 19 Sep 2022 05:09 AM

இரண்டாம் எலிசபெத்துக்கு இன்று இறுதிச் சடங்கு: இந்தியா சார்பில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்பு

மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்.

லண்டன்: மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலாயத்தில் இன்று காலை நடைபெறுகிறது. இதில் இந்தியா சார்பில் இரங்கல் தெரிவிக்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொள்கிறார்.

ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் தங்கியிருந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (96) உடல் நலக்குறைவால் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு வரப்பட்டது. அதன்பின் லண்டன் வெஸ்ட்மின்ஸ் டர் அரங்கில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

மறைந்த ராணிக்கு, இன்று காலை இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன. லண்டன் நேரப்படி இன்று காலை 11 மணியளவில் இறுதிச் சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு 15 நிமிடங்கள் முன்பாக, ராணி எலிசபெத்தின் சவப்பெட்டி வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் இருந்து பீரங்கி வண்டியில் ஏற்றப்பட்டு வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்துக்கு கொண்டு செல்லப்படும்.

இறுதி ஊர்வலத்தில் மன்னர் மூன்றாம் சார்லஸ், அவரது சகோதரர்கள், சகோதரி, மகன்கள் ஆகியோர் ராணுவ வீரர்களுடன் அணிவகுத்துச் செல்வர். வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் நடைபெறும் இறுதிச் சடங்கு கூட்டத்தில், உலகம் முழுவதிலும் இருந்துஅழைக்கப்பட்டுள்ள தலைவர்கள் சுமார் 2,000 பேர் கலந்து கொள்வர்.

இந்த இறுதிச் சடங்குகள் சுமார் ஒரு மணி நேரம் நடைபெறும். அதன்பின் ராணியின் உடல், அவருக்கு மிகவும் பிடித்த அரண்மனைகளில் ஒன்றான விண்ட்சர் அரண்மனை வளாகத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இங்குதான் இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த பலர் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பள்ளிகள், திரையரங்குகள் மூடல்

மறைந்த ராணியின் இறுதிச்சடங்கை முன்னிட்டு, இங்கிலாந்து அரசு இன்று பொது விடுமுறை அறிவித்துள்ளது. அங்கு பள்ளிகள்,திரையரங்குகள் இன்று செயல்படாது.

மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்க இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 3 நாள் பயணமாக நேற்று முன்தினம் மாலை லண்டன் சென்றார். அவர் இந்தியா சார்பில் இரங்கல்களை தெரிவிப்பார். இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட உலக நாடுகளின் தலைவர்களை, லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் மூன்றாம் சார்லஸ் இன்று மாலை சந்திக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x