Published : 19 Apr 2022 03:55 AM
Last Updated : 19 Apr 2022 03:55 AM

அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வலுத்து வரும் நிலையில் இலங்கையில் 17 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்பு; நாடாளுமன்றம் இன்று கூடுகிறது

இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள அதிபர் அலுவலகம் அருகே, அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலகக் கோரி நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள். படம்: ஏஎப்பி

கொழும்பு:இலங்கையில் மக்கள் போராட்டம் வலுத்துவரும் நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 17 பேர் புதிய அமைச்சர்களாக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர். இதில் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் 2 சகோதரர்கள், மகனுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. பரபரப்பான சூழலில் இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடுகிறது.

இலங்கையில் கரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், சுற்றுலாத் துறை முடங்கியது. இதனால் அந்நாட்டின் வருவாய் சரிந்தது. அந்நியச் செலாவணி கையிருப்பு வரலாறு காணாத அளவில் சரிந்ததாலும், கடன் நெருக்கடியாலும் அங்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்குகூட நிதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உணவுப்பொருள், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அவற்றின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. பல மணி நேர மின்வெட்டும் நீடிக்கிறது.

இதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சவும் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் பதவி விலகக் கோரி மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 1-ம் தேதி அதிபர் கோத்தபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வீட்டை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். இருவரும் பதவி விலகக் கோரி கோஷங்களை எழுப்பினர். அப்போது பாதுகாப்பு படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. வாகனங்கள் தீ வைக்கப்பட்டன. பெரும் பதற்றம் ஏற்பட்டதால் கொழும்பு நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மக்களின் போராட்டம் வலுத்து வந்த நிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர்களான சமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச மற்றும் மகன் நமல் ராஜபக்ச உட்பட அமைச்சர்கள் அனைவரும் கடந்த 3-ம் தேதி கூண்டோடு பதவி விலகினர். அதிபரும், பிரதமரும் பதவி விலகவில்லை. இதையடுத்து, 4 பேரை கொண்ட இடைக்கால அமைச்சரவை அமைக்கப்பட்டது. நீதித் துறை அமைச்சராக இருந்த அலி சாப்ரி, புதிய நிதியமைச்சராக பொறுப்பேற்றார். அதற்கு முன்பு நிதியமைச்சராக பசில் ராஜபக்ச இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற கட்சித்தலைவர் குணவர்த்தன கல்வி அமைச்சராகவும் அரசு தலைமை கொறடா ஜான்ஸ்டன் பெர்னாண்டோ நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகவும் பேராசிரியர் ஜி.எல்.பெரிஸ் வெளியுறவு அமைச்சராகவும் பொறுப்பேற்றனர்.

அமைச்சரவை பதவி விலகியதையடுத்து, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண ஒருங்கிணைந்த அரசை அமைக்க வேண்டும் என்றும், இதற்காக நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் அமைச்சக பொறுப்பை ஏற்க முன்வர வேண்டும் என்றும் அதிபர் அழைப்பு விடுத்தார். இதை எதிர்க்கட்சிகள் நிராகரித்தன. அத்துடன், சில கட்சிகள் தங்கள் ஆதரவை திரும்பப் பெற்றதால் அரசு பெரும்பான்மையை இழந்தது.

இதனிடையே, அதிபரும் பிரதமரும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தலைநகர் கொழும்பில் உள்ள அதிபர் மாளிகை முன்பு கூடியுள்ள ஆயிரக்கணக்கானோர், ராஜபக்ச குடும்பம் ஆட்சி அதிகாரத்தில் இருந்து விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுபோல, பாதுல்லா, மட்டக்களப்பு உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளிலும் மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.

இந்தச் சூழலில், இலங்கை அமைச்சரவையை அதிபர் கோத்தபய ராஜபக்ச நேற்று விரிவாக்கம் செய்தார். 17 பேரை புதிய அமைச்சர்களாக நியமித்தார். அதிபர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களில் 8 பேர் முன்னாள் அமைச்சர்கள். மற்றவர்கள் புதுமுகங்கள். எனினும், பிரதமர் மகிந்த ராஜபக்சவின் 2 சகோதரர்கள் , மகன் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட வில்லை.

பரபரப்பான சூழலில் இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. அப்போது, அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா நிதியுதவி: இதனிடையே, இலங்கைக்கு 190 கோடி டாலர் நிதியுதவியை இந்தியா வழங்கி உள்ளது. இந்த உதவியை டீசல், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களாக வழங்கியது. குறிப்பாக 2.7 லட்சம் டன் டீசல், பெட்ரோல் மற்றும் 40 ஆயிரம் டன் அரிசியை வழங்கி உள்ளது. அத்தியாவசிய பொருட்களை வாங்க மேலும் கடனுதவி வழங்குமாறு இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, இலங்கைக்கு 200 கோடி டாலர் வழங்குவது குறித்து இந்தியா பரிசீலித்து வருகிறது.

நிதி நெருக்கடியை சமாளிக்க, 5 ஆயிரம் கோடி டாலர் வெளிநாட்டு கடனை திருப்பி செலுத்துவதை தற்காலிகமாக ஒத்தி வைத்திருப்பதாக இலங்கை அரசு கடந்த வாரம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x