

பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் 2,357 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரிட்டன் சுகாதாரத் துறை தரப்பில், “ நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,357 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 4 பேர் பலியாகினர். ஸ்காட்லாந்து, ஐயர்லாந்து, இங்கிலாந்து ஆகிய பகுதிகளில் கரோனா தொற்றால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் மூத்த மருத்துவ ஆலோசகரும், தலைவருமான கிரிஸ் விட்டி கூறும்போது, “ பொதுமக்களுக்கும், கரோனா தடுப்பூசி திட்டங்களுக்கும் எனது நன்றி. தடுப்பூசி காரணமாக பிரிட்டனில் பல பகுதிகளில் கரோனா குறைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் கரோனா தடுப்பு மருந்தை வேகமாகச் செலுத்தியதன் காரணமாக அங்கு கரோனா தொற்று 65 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக 2,000-க்கும் குறைவானவர்களே தினசரி கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து பிரிட்டன் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது.
உலக அளவில் கரோனாவுக்கு எதிராகத் தடுப்பூசி செலுத்துவதில் பிரிட்டன், அமெரிக்கா, இஸ்ரேல், சிலி ஆகிய நாடுகள் முன்னிலை வகித்து வருகின்றன.
உலகம் முழுவதும் 15 கோடிக்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.