

உலகம் முழுவதும் 1.8 கோடிக்கும் அதிகமான மக்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்காவில் இயங்கும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் கூறும்போது, “ சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸுக்கு தற்போது உலகம் முழுவதும் 1.8 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,87,000 பேர் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். 1 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று மற்றும் இறப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. அமெரிக்காவில் 48, 13,647 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,58,365 பேர் பலியாகினர். இரண்டாவது இடத்தில் பிரேசில் உள்ளது. பிரேசிலில் கரோனா தொற்றால் 27,33,677 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 94,130 பேர் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர்.
வைரஸைக் கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
கரோனா தடுப்பு மருந்துகள்
கரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி உருவாக்கும் பணியில் பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்தின் முதல் சுற்றுப் பரிசோதனை முடிவுகள் வெற்றி அடைந்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
இத்துடன் ஐக்கிய அமீரகம், பிரிட்டன் மட்டுமல்லாது அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கரோனாவுக்குத் தடுப்பூசி மருந்தைக் கண்டறியும் ஆய்வில் ஈடுபட்டுள்ளன.
கரோனா தடுப்பு மருந்துக்கான அனைத்துக் கட்டப் பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிந்துவிட்டதாகவும், ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் ரஷ்யா சமீபத்தில் தெரிவித்தது.