

துருக்கியில் உடல்நிலை சரியில்லாத பூனைக் குட்டியை வாயில் கவ்வியபடி மருத்துவமனைக்கு அழைத்து வந்த தாய்ப்பூனையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.
உலகம் முழுவதும் கரோனா தொற்றால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் லட்சக்கணக்கான மக்களை முடக்கியுள்ளது.
பெரும்பாலானவர்கள் வீட்டிலிருந்தே தங்கள் பணிகளைச் செய்து வருகின்றனர். இந்த நிலையில் பலருக்கு சமூக வலைதளங்களே தற்போது முழுப் பொழுதுபோக்காக மாறியுள்ளது. அந்த வகையில் துருக்கியில் பூனை ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
துருக்கியில் உடல்நிலை சரியில்லாத நிலையில், தனது குட்டியை வாயில் கவ்விக்கொண்டு மருத்துவமனைக்கு வரும் தாய்ப்பூனை ஒன்று வைரலாகியுள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறும்போது, நாங்கள் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைப் பிரிவில் இருந்தோம். அப்போது அந்தப் பூனை, குட்டிப் பூனையைத் தூக்கிக்கொண்டு வந்ததது” என்று தெரிவித்துள்ளார்.
மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் குட்டி மற்றும் தாய்ப்பூனை இரண்டுக்கும் மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டதாக துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.