Published : 27 Jun 2015 12:24 PM
Last Updated : 27 Jun 2015 12:24 PM
நியூசிலாந்துக்கான இந்திய தூதர் ரவி தபாரின் மனைவி அங்கு தனது வீட்டில் பணியாற்றிய நபரை துன்புறுத்தியதாக எழுந்துள்ள புகாரை அடுத்து, ரவி தபாரை இந்திய வெளியுறவு அமைச்சகம் திரும்பப் பெற்றுள்ளது.
நியூசிலாந்துக்கான இந்திய தூதர் ரவி தபாரின் மனைவி அங்கு தனது வீட்டில் பணியாற்றிய நபரை துன்புறுத்தியதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தியத் தூதர் ரவி தபார் அந்நாட்டிலிருந்து வெளியேறுவதாக குறிப்பிட்டார். இதனை வெளியுறவுத் துறையும் உறுதி செய்துள்ளது. "இந்திய தூதருக்கு தனிப்பட்ட முறையில் அவரே முன்வந்து அந்நாட்டிலிருந்து வெளியேற அதிகாரம் உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்துக்கான இந்திய தூதர் ரவி தபார், இவரது மனைவி ஷர்மிளா. இவர்களது நியூசிலாந்து வீட்டில் வேலை பார்த்து வந்த பணிப் பெண்ணை அடித்து துன்புறுத்தியதாக வெலிங்டன் போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, புகார் தொடர்பாக ரவி தபார் தரப்பை விசாரிக்கவில்லை என்று வெலிங்டன் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
புகார் அளித்த நபர் ரவி தபார் வீட்டின் சமையல்காரர் என்று நம்பப்படுகிறது. இவரை, ரவி தபார் வீட்டிலிருந்து 20 கிமீ தூரத்தில் சாலையோரம் துயரமான சூழலில் இருந்ததை வெலிங்டன் போலீஸார் கண்டனர்.
இதனை அடுத்து அவரிடம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், இந்தியத் தூதர் ரவி தபார் மனைவி ஷர்மிளா இவரை அடித்து துன்புறுத்தியதாகவும், அதனால் வீட்டிலிருந்து 20 கிமீ தூரத்துக்கு நடந்த வந்து கொண்டிருந்ததாகவும் போலீஸிடம் தெரிவித்தார்.
ஷர்மிளா தன்னை கொத்தடிமையாக வைத்து அடித்து துன்புறுத்தியதாக வெலிங்டன் போலீஸிடம் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நபர் கடந்த மே மாதம் இந்தியா திரும்பிவிட்டதாகவும் வெலிங்டன் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT