Published : 04 Dec 2014 10:00 AM
Last Updated : 04 Dec 2014 10:00 AM
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதன் மூலம் இருதரப்பு உறவு மேலும் வலுவடையும் என இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக பொறுப்பேற்கவுள்ள ரிச்சர்டு ராகுல் வர்மா (45) தெரிவித்துள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிச்சர்டு ராகுல் வர்மாவை இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக ஒபாமா நியமித்தார். இந்த நியமனத்தை உறுதி செய்வது தொடர்பாக செனட் அவையின் வெளியுறவு விவகார குழு கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. அப்போது வர்மா பேசியதாவது:
வரும் ஜனவரி மாதம் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க அதிபர், வரலாற்றிலேயே முதன்முறையாக இந்திய குடியரசு தினவிழாவில் பங்கேற்க உள்ளார். அத்துடன் அதிபர் பதவியில் இருக்கும்போதே 2 முறை இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டவர் என்ற பெருமையும் இவருக்கு கிடைக்கும்.
மேலும் ஒபாமாவின் இந்திய பயணம், பிரதமர் நரேந்திர மோடி கடந்த செப்டம்பரில் மேற் கொண்ட அமெரிக்க பயணத்துக்கு கிடைத்த வெற்றியாகவும் அமையும். இரு நாடுகளுக்கிடை யிலான உறவை மேலும் பலப்படுத்த இந்த பயணம் உறுதுணையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
குறிப்பாக வர்த்தகம் மற்றும் பாதுகாப்புத் துறையில் பரஸ் பரம் உறவை பலப்படுத்துவது, கடல்சார் பாதுகாப்பு, தீவிரவாத எதிர்ப்பு, தூய்மையான எரிசக்தி, நீடித்த வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறை தொடர்பான தகவல்களை இரு நாடுகளும் பகிர்ந்து கொள்வதற்கு இந்தப் பயணம் உதவும் என்றார்.
இந்தியா -பாகிஸ்தான் முடிவெடுக்க வேண்டும்
சமீபத்தில் நடந்த சார்க் மாநாட்டில் இந்திய - பாகிஸ்தான் தலைவர்கள் சந்தித்து கை குலுக்கி கொண்டனர். மாநாட்டில் எரிசக்தி, ரயில் பாதைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஒப்பந்தம் கையெழுத்தாயின. இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் அமைதி பேச்சு வார்த்தை நடத்த அமெரிக்காவால் தொடர்ந்து ஊக்கப்படுத்தத்தான் முடியும் என்று நினைக்கிறேன். எனினும், பாதுகாப்பு விவகாரத்தில் இறுதி முடிவெடுக்க வேண்டியது இந்தியாவும் பாகிஸ்தானும்தான். இவ்வாறு ரிச்சர்டு ராகுல் வர்மா கூறினார்.
இந்திய - பாகிஸ்தான் உறவு குறித்து கேட்டதற்கு, மோடி பதவி யேற்ற போது, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கலந்து கொண்டார். ஆனால், பாதுகாப்பு விஷயத்தில் அந்த இரண்டு நாடுகள்தான் முடி வெடுக்க வேண்டும். இரு நாடுகளுக்குள் சுமூக உறவு இருப்பது, பிராந்திய தொடர்பை மேம்படுத்தும். தெற்காசிய மக்களுக்குள் தொடர்பை அதிகரிக்கும்’ என்று ரிச்சர்ட் வர்மா கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், ‘இந்திய - பாகிஸ்தான் இடையே தற்போது 3 பில்லியன் டாலர் அளவுக்கு தான் வர்த்தகம் நடைபெறுகிறது. இது மிகவும் குறைவு. இரு நாட்டு உறவு பலப் பட்டால், கணிசமான அளவுக்கு வர்த்தகம் நடத்த முடியும்.
இந்தியாவுடனான அணுசக்தி ஒப்பந்தத்துக்கு பல ஆண்டு களுக்கு முன்னர் அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்தது. அதில் உள்ள நம்பகத்தன்மை தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்று நம்புகிறேன்” என்றார்.
ராகுல் வர்மாவின் நியமனம் உறுதி செய்யப்பட்டால், இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக பொறுப்பேற்க உள்ள முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்ற பெருமை அவருக்கு கிடைக்கும். இந்தப் பதவியை வகித்து வந்த நான்சி பாவல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT