Last Updated : 04 Dec, 2014 12:25 PM

 

Published : 04 Dec 2014 12:25 PM
Last Updated : 04 Dec 2014 12:25 PM

இந்தியாவின் அதிகார மையத்தை தட்டி எழுப்பியவர் மோடி: அமெரிக்க அதிபர் ஒபாமா பாராட்டு

இந்தியாவில் நீண்ட காலமாக முடங்கியிருந்த அதிகார மையத்தை பிரதமர் நரேந்திர மோடி தட்டியெழுப்பிதாக அவருக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமா பாராட்டு தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் நடந்த வணிக வட்டமேஜை கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் அந்நாட்டின் முக்கிய கார்ப்பரேட் நிறுவன தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அமெரிக்க பொருளாதாரத்தின் சூழல் மற்றும் சர்வதேச நாடுகளின் பொருளாதார நிலைமையை பற்றி அவர்கள் விவாதித்தனர். அப்போது இந்தியாவில் புதிதாக பதவியேற்றிருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் செயல்பாடுகள் குறித்தும் பேசப்பட்டது.

அப்போது பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா, "இந்தியாவில் நீண்ட காலமாக முடங்கிக் கிடந்த அதிகார மையத்தை தட்டி எழுப்பிய நரேந்திர மோடியில் செயல்கள் என்னை வியக்க வைக்கிறது. ஆனால் இதில் மோடி எந்தளவு வெற்றி பெற போகிறார் என்பதை நீண்ட கால அளவில் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்" என்றார்.

கடந்த மாதம் மியான்மரில் நடந்த கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உடனான சந்திப்புக்கு பின்னர், "நரேந்திர மோடி ஒரு செயல் வீரர்" என்று ஒபாமா பாராட்டி பேசினார்.

இதனைத் தொடர்ந்து பீஜிங், மியான்மர், ஆஸ்திரேலிய ஆகிய நாடுகளின் பயணங்களுக்கு பின்னர், டெல்லியில் நடக்க இருக்கும் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள வேண்டி பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டதாக அதிபர் ஒபாமா தெரிவித்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

மேலும் இந்த கூட்டத்தில் ஜப்பான், சீனா, ஐரோப்பிய ஒன்றியம், ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பொருளாதார நிலை குறித்தும் அவர் விரிவாக பேசினார்.

அப்போது அவர், "சந்தையின் வளர்ச்சி எதிர்பார்த்த அளவை விட மந்தமான நிலையில் இருக்கும் சூழல் நிலவுகிறது. பொருளாதாரத்தை மேம்படுத்த நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பல இருக்கின்றன. அதனை கொள்கை ரீதியாக ஊக்குவிக்கும் முயற்சிகளும் அதற்கான ஆலோசனைகளும் தொடர்ந்து நடக்கின்றன.

ஜப்பானில் நுகர்வு வரி உள்ளிட்ட நடைமுறைகள் தள்ளி போடப்படுகின்றன. இவை பொருளாதார ஆய்வாளர்களுக்கு ஆச்சரியம் அளித்தாலும், அங்கு அடுத்து வர இருக்கும் தேர்தலை முன்வைத்து பிரதமர் அபே சிலவற்றை தள்ளி போடுகிறார் என்று தெரிகிறது. ஆனால் இதன் மூலம் ஜப்பான் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள் பெரிய அளவில் இருக்கும்

ஐரோப்பிய நாடுகளில் நீண்ட காலமாக நிலவும் பிரச்சினைகளுக்கான தீர்வு தள்ளிப்போடப்படுகிறது. இதனால் ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதார மற்றும் பணவீக்கத்தை மேலும் வலுவிழக்க செய்திடும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x