Published : 13 Dec 2014 11:46 AM
Last Updated : 13 Dec 2014 11:46 AM
ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 21ம் தேதியை 'சர்வதேச யோகா தின'மாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக் கையை ஏற்று அதற்கான அறிவிப்பை ஐக்கிய நாடுகள் சபை நேற்று வெளியிட்டது. மூன்று மாதங்களுக்கு முன்பு ஐ.நா.மன்றத்தில் பிரதமர் நரேந் திர மோடி உரையாற்றினார். அப்போது ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அதைத் தொடர்ந்து இந்தியா சார்பில் தீர்மானங்கள் வரையப் பட்டன. அதற்கு 193 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா.மன்றத்தில் இருந்து 130 நாடுகள் ஆதரவு தெரிவித்திருந்தன. தற்போது ஜூன் 21ம் தேதி யோகா தினமாக அறிவிக்க ஐ.நா.பொது சபை முடிவு செய்துள்ளது. இதற்கு 177 நாடுகள் ஆதரவு அளித்துள்ளன.
இதுவரை ஐ.நா.மன்றத்தில் கொண்டு வரப்பட்ட எந்த ஒரு தீர்மானத்துக்கும் இத்தனை நாடுகளின் ஆதரவு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தீர்மானத்தை ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் அசோக் முகர்ஜி அறிமுகப்படுத்தினார். மேலும், "இந்தியாவின் இந்தக் கோரிக்கைய ஐ.நா. ஏற்றுக் கொண்டிருப்பதன் மூலம் உலகின் பல நாடுகளில் யோகா முக்கி யமான இடத்தைப் பிடித்துள்ளது என்பது தெரிய வருகிறது" என்றார்.
இதைத் தொடர்ந்து மாநிலங்களவையில் அதன் தலைவர் ஹமீது அன்சாரி பேசும்போது, "இதன் மூலம் பழமையான யோகா கலைக்கு சிறந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது" என்றார். இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
பல நாடுகளில் ஜூன் 21ம் தேதி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளதாலும், அன்றைய தினம் வடக்கு துருவத்தில் பகல் நீண்டதாக இருக்கும் என்பதாலும் அந்த தினத்தை யோகா தினமாகக் கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தை 'உலக சுகாதாரம் மற்றும் வெளியு றவுக் கொள்கை'யின் கீழ் ஐ.நா. நிறைவேற்றி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT