Published : 07 Nov 2014 09:38 AM
Last Updated : 07 Nov 2014 09:38 AM
ஐ.நா.வில் வட கொரியாவும், தென் கொரியாவும் உறுப்பினர்கள் ஆனதே ஒரு தனிக் கதை.
1953-ல் கொரியப் போர் முடிவடைந்தது. அப்போதிலிருந்தே ‘’நாங்கள்தான் உண்மையான கொரியா’’ என்று கூறியது வட கொரியா அரசு. அங்கிருந்த சிலர் ‘’தென் கொரியா தனக்குப் புதிய பெயர் எதையாவது வைத்துக் கொள்ளட்டும். கொரியா என்ற பெயர் நமக்கே நமக்கு’’ என்று கூறத் தொடங்கினார்கள். தென் கொரியா சம்மதிக்கவில்லை. ஐ.நா வும்.
பின்னர் வேறொரு வழியை முன்வைத்தது வட கொரியா. ‘’ஐ.நா.சபையில் கொரியா என் பதற்குள்ள ஒரே உறுப்பினர் இருக்கையை நாங்களும் தென் கொரியாவும் சுழற்சி முறையில் வைத்துக் கொள்கிறோம்’’ என்றது. நடைமுறை சாத்திய மில்லை என்பதால் அதுவும் கைவிடப்பட்டது. எனவே இரண்டு கொரியாக்களுமே ஐ.நா.உறுப்பினராக இல்லாமலேயே பல வருடங்கள் இருந்தன. அதாவது கொரியா என்ற அதன் உறுப்பினருக்கான இருக்கை வருடக்கணக்கில் காலியாகவே இருந்தது.
இப்படி இருப்பதை இரண்டு கொரியாக்களுமே விரும்ப வில்லை. ஒரு பாதுகாப்பற்ற உணர்வு இருந்தது. கொரியப் போரில் ஐ.நா.ராணுவம் வட கொரியாவுக்கு எதிராக போரிட்ட போதிலும் ஐ.நா.உறுப்பினராக இருப்பதில் வேறு சில வசதிகள் உண்டு என்ற எண்ணம் இருந்தது வட கொரியாவுக்கு. தவிர வீட்டோ அதிகாரம் உள்ள சோவியத் யூனியனும், சீனாவும் தனக்கு ஆதரவாக இருக்கும்போது ஐ.நா.சபையில் தனக்கெதிரான தீர்மானங்கள் எதையும் எடுத்துவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கை.
ஆனால் ஒரு கட்டத்தில் சோவியத் யூனியன் கைவிரித்து விட்டது. தென் கொரியா தன் பெயரிலேயே உறுப்பினராக வேண்டும் என்று விண்ணப்பித்தால், இனியும் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அதைத் தடுக்க மாட்டேன் என்று கூறிவிட்டது. இந்த அறிவிப்பைக் கேட்டதும் சியோலில் (சியோல்தான் தென் கொரியாவின் தலைநகர்) ஒரே கொண்டாட்டம்.
1991-ல் வட கொரியத் தலைநகருக்கு சீனப் பிரதமர் விஜயம் செய்தார். அப்போது இருதரப்புக்கும் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஐ.நா.சபையில் வட கொரியா உறுப்பினராவது குறித்தும் கருத்துகள் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்க வேண்டும். செப்டம்பர் 1991-ல் ஐ.நா.வில் உறுப்பினராவதற்காக வட கொரியா, தென் கொரியா இரண்டுமே தங்கள் விண்ணப்பங் களை அனுப்பின. அவை இரண்டு தனி நாடுகளாக ஐ.நா.வால் அங்கீகரிக்கப்பட்டு, உறுப்பினர்க ளாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டன.
வட கொரியாவை யார் ஆட்சி செய்கிறார்கள்? இதை அறிய இதற்கு முன்பாக இதை ஆட்சி செய்த இருவரை அறிய வேண்டும். 1948 செப்டம்பர் 9 அன்று வட கொரியா தன்னை ஜனநாயக மக்களின் கொரியக் குடியரசு என்று அறிவித்துக் கொண்டது. இதற்குத் தலைமை ஏற்றார் கிம் இல் சுங்.
வட கொரியாவில் அன்றிலிருந்து இன்றுவரை ஒரே கட்சிதான். கொரியாவின் உழைப்பாளர் கட்சி என்று அதற்குப் பெயர். இப்போது ஓரிரு உதிரிக் கட்சிகள் அங்கு உண்டு என்றாலும் அவையும் உழைப்பாளர் கட்சிக்கு அடங்கி ஒடுங்குபவைதான்.
இந்தக் கட்சியின் தலைவராகவும் விளங்கினார் கிம் இல் சுங். இவர் சோவியத் யூனியனின் ஆதரவு பெற்றவர். தொடக்கத்தில் சேர்மென் என்றுதான் தன்னை அழைத்துக் கொண்டார் (கம்யூனிஸம்!). ஆனால் 1972 டிசம்பர் 28ல் தன்னை ஜனாதிபதி என்று பிரகடனப்படுத்திக் கொண்டார். இறக்கும்வரை அவர்தான் வட கொரியாவின் தலைவர். 1994ல் அவர் இறந்தபோது கட்சி அவரைத்தான் ‘’கொரியக் குடியரசின் நிரந்தரத் தலைவர்’’ என்று அதிகார பூர்வமாகவே அறிவித்தது.
அவருக்கு அடுத்து ஆட்சியைப் பிடித்தவர் கிம் ஜாங் இல். பெயரில் நிறைய ஒற்றுமை இருக்கிறதே என்கிறீர்களா? இயல்புதான். கிம் இல் சுங்கின் மகன்தான் இவர். “தான் இருக்கும் போதே தனக்குப் பிறகு கட்சியும் ஆட்சியும் தன் மகனுக்குதான்’’ என்று தலை வர் முன்பே ஏற்பாடு செய்திருந்தார். (கம்யூனிஸத்தை ஏற்றுக் கொண்ட ஒரு நாட்டில் வாரிசு பட்டமேற்க வழி செய்த கூத்து வட கொரியாவில் நடந்தது!).
ஆனால் மகன் கிம் ஜாங் சுலபத்தில் அரசுப் பொறுப்பை ஏற்கவில்லை. கட்சியின் தலைமை யையும் ஏற்கவில்லை. வட கொரியாவின் ராணுவத் தலைவர் பதவியை மட்டும் முதலில் ஏற்றுக் கொண்டார். ‘தனிச்சிறப்பு மிக்க தலைவர்’ (Great Leader) என்று அன்புடன் வட கொரிய மக்களால் அழைக்கப்பட்ட இவருக்கு இந்தப் பொறுப்பும் ரோஜா மெத்தையாக இருக்கவில்லை. அவருக்குப் புற்றுநோய், அவர் உடலில் சிறுநீரகக் கற்கள் என்பதுபோல் பலவித வதந்திகள். அதிபரிடம் நேரிடையாக இதுபற்றியெல்லாம் கேட்டு தெளிவு பெற முடியாது என்பதால் வதந்திகள் இறக்கை கட்டிப் பறந்தன.
போதாக்குறைக்கு “மனைவி மறைந்துவிட்டது’’ வேறு இவரது இமேஜை பலவீனப்படுத்தியது. தீவிர கம்யூனிஸ்ட் குடும்பத் தில் பிறந்தவர் ரிம். ஒரு நடிகை யாக தன் வாழ்க்கையைத் தொடங் கினார். பிறகு ஒரு டாக்டரை மணந்து கொண்டார். காலப் போக்கில் கிம் ஜாங்கைச் சந்தித்தவுடன் மனம் மாறியது. டாக்டரை விவாகரத்து செய்தார்.
கிம் ஜாங் - ரிம் ஆகியோர் திருமணம் செய்து கொண்டனரா? விடை கிடையாது. ஆனால் இரு வரும் தம்பதியாகவே வாழ்ந்தனர். ஒரு குழந்தையும் பிறந்து வளர்ந்தது. இந்த நிலையில் ரிம் மறைந்து விட்டார். சியோலுக்கு தப்பியோடி விட்டார் என்பரே பலரது ஊகமாக இருந்தது.
வட கொரிய ஆதரவு நிலையி லிருந்து தென் கொரிய ஆதர வாளராக மாறிய மூத்த அரசியல் நோக்கரான வாங் ஜாங் யாப் என்பவர் ஒரு குண்டை வீசினார் (வார்த்தைகளின் மூலமாகத்தான்). “இப்போது வட கொரியாவை ஆளும் கிம் ஜாங் இல் தனது அணு ஆயுதங்களின் மூலம் தென் கொரியாவை விரைவில் அழிக்கத் திட்டமிட்டிருக்கிறார்’’ என்றார்.
நல்ல வேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை. என்றாலும் தென் கொரியாவை எப்போதும் ஒருவித கலக்கத்துடனேயே இருக்க வைத்தது இது போன்ற பேச்சுகள். இப்போது வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன். உங்கள் ஊகம் சரிதான். கிம் ஜாங் இல்லின் மகன் இவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT