Last Updated : 21 Nov, 2014 09:51 AM

 

Published : 21 Nov 2014 09:51 AM
Last Updated : 21 Nov 2014 09:51 AM

எபோலா வைரஸ் காய்ச்சல்: மேற்கு ஆப்பிரிக்காவில் 5,420 பேர் பலி

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள 8 நாடுகளில் எபாலோ வைரஸ் காய்ச்சலால் 15,145 பேர் பாதிக்கப்பட்டனர். இதில், 5,420 பேர் உயிரிழந்துள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினி, லைபீரியா, சியாரா லியோன் உட்பட 8 நாடுகளில் எபோலா வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.

2013-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து தற்போது வரை மொத்தம் 15,145 பேர் இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இதில், சிகிச்சை பலனின்றி 5,420 பேர் உயிரிழந்துவிட்டனர். தங்களுக்கு கிடைத்த தகவலின்படி, இதையும்விட அதிகமானோர் பலியாகியிருக்கக் கூடும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

லைபீரியாவில் இக்காய்ச்சலால் 7,069 பேர் பாதிக்கப்பட்டனர். இதில், 2,964 பேர் உயிரிழந்துவிட்டனர். சியாரா லியோனில் 6,073 பேர் பாதிக்கப்பட்டனர். இதில், 1,250 பேர் உயிரிழந்துவிட்டனர். மாலியில் 6 பேர் பாதிக்கப்பட்டனர், அதில், 5 பேர் உயிரிழந்துவிட்டனர். நைஜீரியாவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 20 பேரில் 8 பேர் உயிரிழந்து விட்டனர். செனகலில் ஒருவர் உயிரிழந்தார்.

அதே போல அமெரிக்காவில் 4 பேருக்கு எபோலா வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டது. அதில், ஒருவர் (லைபீரியாவைச் சேர்ந்தவர்) உயிரிழந்துவிட்டார். எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவினருக்கும் காய்ச்சல் பரவியுள்ளது. இதுவரை (டாக்டர்கள் உட்பட) 568 மருத்துவ பணியாளர்களுக்கு எபோலா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருந்ததாகவும், அதில் 329 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x