Published : 19 Nov 2014 10:31 AM
Last Updated : 19 Nov 2014 10:31 AM
தீவிரவாதிகளின் பிடியிலிருக்கும் பிணைக் கைதிகளை மீட்கும் விவகாரத்தில் புதிய கொள்கைகளை வகுக்க வேண்டும் என்றும், அது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளுமாறும் அமெரிக்க அதிபர் ஒபாமா, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் வெளிநாட்டினர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் ஜேம்ஸ் போலே என்ற அமெரிக்க பத்திரிகையாளரைப் பிடித்துச் சென்ற ஐ.எஸ். தீவிரவாதிகள், அவரை கொலை செய்தனர். பிணைக் கைதியை விடுவிப்பதற்கு பணம் அளிப்பது தொடர்பாக அரசின் பல துறைகளும் பல்வேறு விதமான தகவல்களை தங்களிடம் கூறியதாக ஜெம்ஸ்போலேவின் உறவினர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
இதையடுத்து அமெரிக்க எம்.பி. டன்கன் ஹன்டர், பிணைக் கைதிகளை மீட்கும் கொள்கையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அரசு துறைகளுக்கு இடையே போதிய ஒத்துழைப்பு இல்லாததால், பிணைக் கைதிகளை மீட்பதில் சிக்கல் ஏற்படுவதாக அவர் கூறினார்.
இது தொடர்பாக அவருக்கு அமெரிக்க பாதுகாப்புக் கொள்கை வகுக்கும் துறைச் செயலாளர் கிறிஸ்டின் வார்மத் எழுதிய கடிதத்தில், “வெளிநாடுகளில் அமெரிக்கர்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டு கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
தீவிரவாதிகளின் இச்செயலைத் தொடர்ந்து, பிணைக் கைதிகளை மீட்பது தொடர்பான அரசின் கொள்கையை மறுபரிசீலனை செய்ய அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார். பிணைக்கைதிகளை மீட்பதில் சம்பந்தப்பட்டவரின் குடும்பத்தினருடன் கலந்தாலோசிப்பது, உளவுத் தகவல்களை திரட்டுதல், பிற நாடுகளுடனான ராஜீய ரீதியிலான உறவுகள் ஆகியவை குறித்து புதிய கொள்கைகளை வகுக்க வேண்டும் என்று ஒபாமா கூறியுள்ளார்” என குறிப்பிடப் பட்டுள்ளது.
எனினும், பிணைக் கைதிகளை பணம் கொடுத்து விடுவிப்பது தொடர்பான யோசனை எதுவும் முன்வைக்கப்பட்டிருக்கிறதா என்பது பற்றி தெரியவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT