Published : 15 Nov 2014 02:28 PM
Last Updated : 15 Nov 2014 02:28 PM
பாகிஸ்தானில் பாதுகாப்புத் துறைக்கு உளவு பார்த்ததாக குற்றம்சாட்டி ஒருவரை மக்கள் முன்னிலையில் அல்-காய்தா பயங்கரவாத இயக்கத்தினர் தலையைக் கொய்து படுகொலை செய்தனர்.
பாகிஸ்தானின் கைபர் மாகாணத்தின் திரா பள்ளத்தாக்கில் மக்கள் அதிகம் கூடும் சந்தைப் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) அல்-காய்தா பயங்கரவாத இயக்கத்தினர் ஒருவரை அழைத்து வந்து பொதுமக்கள் முன்னிலையில் தலையை கொய்து படுகொலை செய்தனர்.
மேலும் கொல்லப்பட்டவரின் உடலை அன்று மாலை வரை அங்கிருந்து அகற்றக் கூடாது என்று அவர்கள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும் அந்நாட்டின் பத்திரிகையான 'டான்' குறிப்பிட்டுள்ளது.
கைபர் மாகாணத்தின் மேராபன் கலே உள்ளிட்ட சில பகுதிகளை லஷ்கர்-இ-தாலிபான் மற்றும் லஷ்கர்-இ-இஸ்லாம் இயக்கத்தினர் தனித்தனியே தங்களது ஆதிக்கத்தில் வைத்துள்ளனர்.
இந்த இரு இயக்கங்களும் சமீபத்தில் கூட்டு சேருவதற்கான பேச்சுவார்த்தை நடத்தி வந்ததை அடுத்து, அந்த பகுதியை பாதுகாப்புப் படையினர் கண்காணித்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அந்தப் பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT