Published : 21 Nov 2014 10:33 AM
Last Updated : 21 Nov 2014 10:33 AM
பிரிட்டனைச் சேர்ந்த அயன் க்யுரேஷி ஐந்து வயது சிறுவன். மைக்ரோசாஃப்ட் நடத்திய தேர்வில் கலந்துகொண்டு, உலகிலேயே மிக இளம் வயது கம்ப்யூட்டர் நிபுணர் என்ற சிறப்பைப் பெற்றிருக்கிறான். மூன்று வயதிலேயே கம்ப்யூட்டரில் விளையாட ஆரம்பித்துவிட்டான் அயன். ‘பொதுவாகக் குழந்தைகள் கம்ப்யூட்டரை அதிகம் பயன்படுத்தினால் எதிர்மறையான விளைவுகள் தோன்றும் என்பார்கள்.
ஆனால் அயன் தனக்குக் கிடைத்த வாய்ப்பை நல்லவிதமாகப் பயன்படுத்திக்கொண்டான்’ என்கிறார் அப்பா அசிம். அயனின் அடுத்த திட்டம், இதைவிடக் கடினமான தேர்வை எழுதுவதுதான். இதற்காகத் தினமும் இரண்டு மணி நேரம் கம்ப்யூட்டருக்கு நேரம் ஒதுக்குகிறான். ‘அவன் தினமும் உலக சாதனை படைக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. ஆனால் எதைச் செய்தாலும் அதைச் சிறப்பாகச் செய்யவேண்டும் என்றே நினைக்கிறேன்’ என்கிறார் அயனின் அம்மா.
குழந்தை மேதை!
அமெரிக்காவில் உள்ள ரோட் தீவில் வசிக்கிறார் டாக்டர் டேவிட் டோசா. முதுமையியல் மருத்துவரான டேவிட், ஒரு மருத்துவமனையையும் நடத்தி வருகிறார். 7 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பூனையைத் தத்தெடுத்து, ஆஸ்கர் என்று பெயரிட்டு வளர்த்து வருகிறார். அந்தப் பூனைக்கு அபூர்வ சக்தி இருப்பதாகச் சொல்கிறார் டேவிட். மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் மரணத்தை முன்கூட்டியே அறிந்து, தெரிவித்துவிடுகிறது ஆஸ்கர். அதாவது மரணத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் நோயாளிகளின் அறைகளுக்கு ஆஸ்கர் செல்கிறது.
இப்படியும் அப்படியும் ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு, ஒரு நோயாளியின் அருகில் போய் நிற்கிறது. அடுத்த சில மணி நேரங்களில் அந்த நோயாளி மரணத்தைச் சந்தித்துவிடுகிறார். ஏழாண்டுகளில் ஒன்றிரண்டு தடவை மட்டும்தான் ஆஸ்கரின் கணிப்பு தவறாக இருந்திருக்கிறது என்கிறார் டேவிட். விலங்கியல் ஆய்வாளர்கள் இது தற்செயலான நிகழ்வு என்று சொன்னாலும் ஆஸ்கருக்கு அபூர்வ சக்தி இருப்பதாக நம்புகிறார் டேவிட். ஆஸ்கரைப் பற்றி ஒரு புத்தகத்தையும் எழுதியிருக்கிறார். மருத்துவமனையில் மேலும் ஐந்து பூனைகள் இருந்தாலும் ஆஸ்கருக்கு மட்டுமே அந்தச் சக்தி இருக்கிறதாகச் சொல்கிறார் டேவிட்.
என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது… ஒண்ணுமே புரியல உலகத்திலே...
தாமஸ் யாங் ஓவியங்களில் எளிமையும் புத்திசாலித்தனமும் தெரிகின்றன. சிங்கப்பூரில் டிசைனராகவும் ஓவியராகவும் இருக்கும் தாமஸ், சைக்கிள் டயர் மூலம் உலகில் உள்ள முக்கியமான கட்டிடங்களை வரைவதில் தேர்ந்தவராக இருக்கிறார். லண்டன் பாலம், ஈஃபில் டவர், எம்பயர் ஸ்டேட் பில்டிங் போன்றவை கறுப்பு மையில் கண்களைக் கவர்கின்றன. ஒவ்வோர் ஓவியத்தையும் 100 பிரிண்ட்கள் வரை போட்டு விற்பனை செய்கிறார் தாமஸ். இவரது டயர் ஓவியங்கள் டிசர்ட், கைப்பை, புத்தகம் போன்றவற்றில் இடம்பெற்றுள்ளன.
வல்லவனுக்கு எதிலும் ஓவியம்!
ஜேசன் பிரெளன் என்ற கால்பந்து விளையாட்டு வீரர் விளையாட்டை கைவிட்டுவிட்டு, தன்னுடைய கனவை நினைவாக்கி வருகிறார். 31 வயது ஜேசன் தென் கரோலினாவில் ஒரு பண்ணையை வாங்கி, சர்க்கரை வள்ளிக்கிழங்கைப் பயிர் செய்து வருகிறார். நாள் முழுவதும் விவசாயத்திலேயே தன் பொழுதைக் கழிக்கிறார். அறுவடையான உருளைக்கிழங்குகளை ஏழை மக்களுக்கு வழங்கி வருகிறார்.
’என்னைப் பற்றி யார் என்ன நினைத்தாலும் கவலை இல்லை. நான் நினைத்ததை மகிழ்ச்சியுடன் செய்கிறேன். நிறைவாக வாழ்கிறேன்’ என்கிறார் ஜேசன். ஆரம்பத்தில் விளைச்சல் குறைவாக இருந்தது. பல்வேறு நிபுணர்கள், விவசாயிகளிடம் விசாரித்து, புதுப்புது யுத்திகளைக் கையாண்டு வெற்றி பெற்றுவிட்டார். இந்த ஆண்டு 45 ஆயிரம் கிலோ உருளைக் கிழங்குகளை அறுவடை செய்திருக்கிறார் ஜேசன்.
எல்லோராலும் நினைத்ததைச் செய்யமுடிவதில்லை.. நீங்க நடத்துங்க ஜேசன்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT