Published : 22 Feb 2014 11:37 AM
Last Updated : 22 Feb 2014 11:37 AM

ராணுவ நீதிமன்ற விசாரணை: முஷாரப் கோரிக்கை நிராகரிப்பு

பாகிஸ்தான் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் (70) தன் மீதான தேசத் துரோக வழக்கை ராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இதனை சிறப்பு நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. மேலும் வரும் மார்ச் 11-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு கடந்த 18ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, “முஷாரப் முன்னாள் ராணுவ தளபதி என்பதால் அவரை ராணுவ நீதிமன்றத்தில் மட்டுமே விசாரிக்க முடியும்” என்று அவரது வழக்கறிஞர் வாதிட்டார். மேலும் 3 உறுப்பினர்கள் கொண்ட சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி பைசல் அராப் தலைமையிலான சிறப்பு நீதிமன்றம் தனது தீர்ப்பை பிப்ரவரி 18ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்நிலையில் முஷாரப்பின் கோரிக்கையை நிராகரிப்பதாக நீதிமன்றம் நேற்று அறிவித்தது. இவ்வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருப்பதாகத் தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை மார்ச் 4ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். மேலும் மார்ச் 11-ம் தேதி முஷாரப் தங்கள் முன் ஆஜராகவும் உத்தரவிட்டனர்.

இத்தீர்ப்பு இவ்வழக்கில் முஷாரப்புக்கு ஏற்பட்ட பின்னடைவாகக் கருதப்படுகிறது.

அரசமைப்பு சட்டத்தை முடக்கி வைத்தது, நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்தது, நீதிபதிகளை பதவி நீக்கம் செய்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் முஷாரப் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், முஷாரப்பின் ராணுவ நீதிமன்ற விசாரணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அவரது வழக்கறிஞர்களின் ஒருவரான அகமது ராசா சசூரி கடுமையாக சாடியுள்ளார்.

“சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் முஷாரப் ஆட்சிக் காலத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள். தங்கள் பதவி நீக்கத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள். எனவே அவர்கள் முஷாரப்புக்கு எதிராக செயல்படுகின்றனர். இவ்வழக்கில் உண்மை மறைக்கப்படுகிறது. சட்டங்கள் வளைக்கப்படுகின்றன” என்றார் அவர்.

முன்னாள் ராணுவ தளபதி ஒருவர் தேசத் துரோக வழக்கை சந்திப்பது பாகிஸ்தான் வரலாற்றில் இதுவே முதல் முறை. உடல்நலக்குறைவு காரணமாக முஷாரப் கடந்த ஜனவரி 2-ம் தேதி ராவல்பிண்டியில் உள்ள ஆயுதப் படை இதயமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x