Published : 11 Aug 2014 06:58 PM
Last Updated : 11 Aug 2014 06:58 PM

உக்ரைன் சிறை மீது ஏவுகணை வீச்சு: கலவரத்தில் 100 கைதிகள் தப்பி ஓட்டம்

உக்ரைனின் டோன்ஸ்டெக் நகரில் உள்ள பாதுகாப்பு மிகுந்த சிறைச்சாலை மீது இன்று ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் ஏற்பட்ட கலவரத்தால் 100-க்கும் அதிகமான கைதிகள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

உக்ரைனில் ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சியாளர்களுக்கும் அந்நாட்டு ராணுவத்திற்குமான உள்நாட்டு பிரச்சினை நீடித்துவருகிறது. இருத்தரப்பிலும் ஏவுகணை வீச்சுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் அங்கிருந்து லட்சக்கணக்கான மக்கள் வெவ்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று டோனெட்ஸ்க்கில் உள்ள மிகப் பெரிய சிறைச்சாலை மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனால் சிறையின் மின் சேவை பாதிக்கப்பட்டதை அடுத்து சிறையில், பதற்றமான சூழல் ஏற்பட்டது. பரபரப்பான சூழலை பயன்படுத்தி, அங்கிருந்து 100-க்கும் அதிகமான கைதிகள் தப்பி ஓடினர்.

இது குறித்து டோன்ஸ்டெக் சிறையின் செய்தித் தொடர்பாளர் மெக்சிம் ரோவின்ஸ்கி கூறும்போது, "கிளர்ச்சியாளர்கள் நடத்தியத் ஏவுகணை வீச்சில் சிறைச்சாலையின் ஒரு பகுதி சேதமடைந்தது. இதனால் சிறையில் ஏற்பட்ட பதற்றத்தை பயன்படுத்தி, மிகவும் ஆபத்தான 100-க்கும் அதிகமான கைதிகள் தப்பி ஓடினர்.

தப்பியவர்கள் குறித்து சரியான தகவலை உடனடியாக வெளியிட முடியவில்லை. குழப்பத்திற்கு நடுவே வெளியே சென்ற 34 கைதிகள் சிறைக்கு திரும்பியுள்ளனர்" என்றார்.

உக்ரைனில் நேற்று நள்ளிரவு நடத்தப்பட்ட ஏவுகணை வீச்சில் டோனெட்ஸ்க் நகரத்தின் மின் சேவைகள் பல துண்டிக்கப்பட்டன. 10க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள் முற்றிலுமாக தரைமட்டமாகி உள்ளன. இதனால் சுமார் 20,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலின் அச்சத்தில் 400,000 பேர் சொந்த இடங்களை விட்டு வெளியேறி உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x