Published : 05 Aug 2014 05:14 PM
Last Updated : 05 Aug 2014 05:14 PM
பிரதமர் நரேந்திர மோடி, வரும் செப்டம்பர் மாதம் அமெரிக்காவுக்கு வரும்போது நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்த வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
வரும் செப்டம்பர் மாதம் இறுதியில் அமெரிக்காவுக்கு வரும் நரேந்திர மோடி, வெள்ளை மாளிகையில் அதிபர் ஒபாமாவை சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மோடியை கவுரவிக்கும் வகையில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அந்நாட்டு எம்.பி.க்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இக்கோரிக்கையை வலியுறுத்தி இரு அவைகளின் தலைவர்களுக்கு 80-க்கும் மேற்பட்ட அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் எழுதியிருந்தனர்.
ஆனால், அதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் பிரதிநிதிகள் அவையின் 435 உறுப்பினர் பதவியிடங்களுக்கும். செனட் அவையின் 33 உறுப்பினர் பதவியிடங்களுக்கும் வரும் நவம்பர் 4-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
இரு அவைகளின் பெரும்பாலான உறுப்பினர்கள், தேர்தல் பிரச்சாரம் செய்ய தங்களின் தொகுதிக்கு சென்றுவிடுவார்கள். எனவே, மோடி வருகையின்போது அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்தினால், அதில் பெரும்பாலான உறுப்பினர்களால் பங்கேற்க இயலாது. இதனால், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மோடி உரை நிகழ்த்த பெரும்பாலும் வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT