Published : 15 Apr 2025 05:47 PM
Last Updated : 15 Apr 2025 05:47 PM

வர்த்தகப் போர் தீவிரம்: அமெரிக்காவின் ‘போயிங்’ ஜெட் விமானங்கள் வாங்குவதை நிறுத்தியது சீனா!

குறியீட்டுப் படம்

பெய்ஜிங்: அமெரிக்க விமானப் பெருநிறுவனமான போயிங்-கிடமிருந்து ஜெட் விமானங்கள் வாங்குவதை நிறுத்துமாறு சீனா தனது விமான நிறுவனங்களுக்கு தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றது முதல், அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையுடன் செயல்பட்டு வருகிறார் புதிய அதிபர் டொனால்டு ட்ரம்ப். இதைத் தொடர்ந்து உலக நாடுகளில் இருந்து அமெரிக்கா வரும் பொருட்களுக்கு இறக்குமதி வரியை அதிகம் விதித்து உலக பத்திரிகைகளின் தலைப்புச் செய்தியாக மாறியுள்ளார். சமீபத்தில் உலக நாடுகளுக்கு பரஸ்பர வரிவிதிப்பை அதிபர் ட்ரம்ப் அமல்படுத்தியிருந்தார்.

கடந்த 9-ம் தேதி முதல் அந்த வரிவிதிப்பு அமலாக இருந்த நிலையில், வர்த்தகப் போர், சர்வதேச பங்குச் சந்தைகளின் சரிவு, உலகளாவிய பொருளாதார மந்த நிலை ஆகியவற்றின் காரணமாக அதை 90 நாட்களுக்கு அதிபர் ட்ரம்ப் நிறுத்தி வைத்துள்ளார். எனினும், இந்த வரிவிதிப்புப் பட்டியலில் சீனாவை மட்டும் அதிபர் ட்ரம்ப் தவிர்த்துள்ளார். மேலும், அந்த நாட்டுக்கு தொடர்ந்து வரிவிதிப்பையும் உயர்த்தி வருகிறார்.

பதிலுக்குச் சீனாவும் அமெரிக்கப் பொருட்களுக்கான வரிவிதிப்பை உயர்த்தி வருகிறது. தற்போது, சீனப்பொருட்களுக்கான வரியை அமெரிக்கா 145 சதவீதமாக உயர்த்திய நிலையில் அதற்கு சீனா, அமெரிக்க பொருட்களுக்கான வரியை 125 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், போயிங் நிறுவனத்திடமிருந்து ஜெட் விமானங்கள் வாங்குவதை நிறுத்துமாறு சீனா தனது விமான நிறுவனங்களுக்கு தெரிவித்திருப்பதாக ப்ளூம்பெர்க் நியூஸ் இன்று (செவ்வாயன்று) செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து விமான உதிரி பாகங்கள் வாங்குவதையும் நிறுத்துமாறு சீனா தனது விமான நிறுவனங்களுக்கு கூறியுள்ளதாக வணிகச் செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, அமெரிக்காவுக்கு கனிமங்கள், முக்கிய உலோகங்கள், காந்தம் போன்ற பொருட்களின் ஏற்றுமதியையும் சீனா நிறுத்தியுள்ளது. இதனால் அமெரிக்காவின் ஆயுதங்கள், மின்னணுவியல், வாகன உற்பத்தியாளர்கள், எரோஸ்பேஸ் உற்பத்தியாளர்கள், செமிகண்டக்டர் நிறுவனங்கள், பிற நுகர்வோர் பயன்பாட்டுக்கான பொருட்களை தயாரிக்க தேவையான மூலக்கூறுகள் முற்றிலும் தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே, கார்கள் முதல் ஏவுகணைகள் வரை தயாரிக்க தேவையான காந்தங்கள் மற்றும் மூலக்கூறுகளின் ஏற்றுமதி சீன துறைமுகங்களில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x