Published : 16 Mar 2025 08:21 AM
Last Updated : 16 Mar 2025 08:21 AM
புதிய தடை விதிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 41 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்கா வருவதற்கு விரைவில் தடை விதிக்க டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் வட்டாரத்தில் இருந்து தங்களுக்கு கிடைத்த வரைவு அறிக்கையின் அடிப்படையில் ராய்ட்டர் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வரைவு அறிக்கையில் மொத்தம் 41 நாடுகள் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் முதல் குழுவில் ஆப்கானிஸ்தான், ஈரான், சிரியா, கியூபா, வடகொரியா உள்ளிட்ட 10 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை முற்றிலும் நிறுத்திவைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதையடுத்து இரண்டாவது குழுவில் எரித்ரியா, ஹைதி, லாவோஸ், மியான்மர், தெற்கு சூடான் ஆகிய 5 நாடுகள் உள்ளது. இந்த நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவது பகுதி அளவில் நிறுத்தி வைக்கப்படும். சுற்றுலா, மாணவர் விசாக்கள் மற்றும் பிற புலம்பெயர்வு விசா பெறுவதை இது பாதிக்கும்.
மூன்றாவது குழுவில், பாகிஸ்தான், பூட்டான், மியான்மர் உள்ளிட்ட 26 நாடுகள் உள்ளன. இந்த நாடுகளின் அரசுகள் 60 நாட்களுக்குள் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முயற்சிக்கவில்லை என்றால் அமெரிக்க விசா வழங்கலை நிறுத்தி வைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.
இதுகுறித்து பெயர் கூறவிரும்பாத அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்தப் பட்டியலில் மாற்றம் ஏற்படலாம். இந்தப் பட்டியலுக்கு வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ உட்பட அரசு நிர்வாகம் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை" என்றார்.
அமெரிக்காவின் 47-வது அதிபராக ட்ரம்ப் கடந்த ஜனவரியில் பதவியேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் முதல்முறையாக பதவி வகித்தபோது முஸ்லிம் பெரும்பான்மையாக வசிக்கும் 7 நாடுகளின் மக்களுக்கு பயணத் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment