Published : 14 Mar 2025 05:02 PM
Last Updated : 14 Mar 2025 05:02 PM

“உக்ரைன் மீதான போரைத் தொடர ரஷ்ய அதிபர் புதின் புதிய சூழ்ச்சி!” - ஜெலன்ஸ்கி குற்றாச்சாட்டு

கீவ்: இரு நாடுகளுக்கு இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தை தாமதப்படுத்தும் நிபந்தனைகளை முன்மொழிந்து, ரஷ்ய அதிபர் புதின் சூழ்ச்சி செய்து வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.

உக்ரைன் அதிபர் வொலாடிமிர் ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில், "இப்போது, போர் நிறுத்த யோசனைக்கு பதில் அளிக்கும் விதமாக ரஷ்ய அதிபர் புதினின் முன்தீர்மானிக்கக்கூடிய சூழ்ச்சியான பதிலைக் கேட்டிருக்கிறோம். இந்தத் தருணத்தில், அதை நிராகரிக்கக் கூட அவர் தயாராகலாம். உண்மையில், ரஷ்யா இந்தப் போரைத் தொடர விரும்புவதாகவும், உக்ரேனியர்களை தொடர்ந்து கொன்று குவிக்க விரும்புவதாகவும் ட்ரம்பிடம் அவர் நேரடியாகச் சொல்ல அஞ்சுகிறார். அதனால்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரஷ்யா முன்நிபந்தனைகளுடன் அணுகி, முடிந்த வரை அதைத் தமாதப்படுத்தவோ அல்லது நீர்த்துப்போகச் செய்யவோ நினைக்கிறது.

புதின் இதனை அடிக்கடிச் செய்கிறார். அவர் வேண்டாம் என்று நேரடியாகச் சொல்லவில்லை. ஆனால், விஷயங்களை பின்னுக்கு இழுத்து நியாயமானத் தீர்வுகளை சாத்தியமற்றது ஆக்குகிறார். ரஷ்ய சூழ்ச்சியின் மற்றொரு வடிவமாகத்தான் இதனை நாங்கள் பார்க்கிறோம். தரை, கடல், வான்வழி உள்ளிட்ட தாக்குதல் தொடர்பாக நிபந்தனையற்ற போர் நிறுத்தத்துக்கான ஒப்பந்தத்தை அமெரிக்கா வழங்கியுள்ளது. உக்ரைன் அதனை ஏற்றுக்கொண்டது. அதனைக் கண்காணிக்கவும், சரிபார்க்கவும் அமெரிக்க ஏற்பாடு செய்திருப்பதாக நாங்கள் கேள்விப்பட்டோம்.

முடிந்த வரை ஆக்கபூர்வமாகவும் விரைவாகவும் செயல்பட உக்ரைன் தயாராக உள்ளது. இது குறித்து அமெரிக்க பிரதிநிதிகளுடன் நாங்கள் விவாதித்துள்ளோம். மேலும் எங்களுடைய ஐரோப்பிய கூட்டாளிகள், அதேபோல் உலகில் உள்ள எங்கள் நட்பு நாடுகள் இதை அறிந்துள்ளனர். செயல்முறையைச் சிக்கலாக்கும் எந்த நிபந்தனையையும் நாங்கள் விதிக்கவில்லை. ரஷ்யாதான் அதனைச் செய்கிறது. நாங்கள் எப்போதும் சொல்வது போல, ஒரே ஒரு தடை, ஆக்கபூர்வமற்ற விஷயம் இருக்கிறது என்றால் அது ரஷ்யாதான். அவர்களுக்கு இந்தப் போர் தேவை. புதின் நீண்ட காலம் நிலவிய அமைதியைத் திருடி, இந்தப் போரைத் தினம் தினம் நடத்த விரும்புகிறார். அவருக்கு அழுத்தம் கொடுக்கும் நேரம் இது" என்று ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சவுதி அரேபியாவில் அமெரிக்காவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் அந்நாடு முன்மொழிந்த 30 நாள் போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் ஒப்புக் கொண்டது. ரஷ்யாவுடன் உடனடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடவும் உக்ரைன் சம்மதம் தெரிவித்திருந்தது. இந்த போர்நிறுத்த ஒப்பந்தம், நிலம், கடல் மற்றும் வான்வழித் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இந்நிலையில், இந்தப் போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல் அளிக்க ரஷ்ய அதிபர் புதின் சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x