Published : 31 Jan 2025 02:32 AM
Last Updated : 31 Jan 2025 02:32 AM
அமெரிக்காவின் முன்னணி வங்கியின் புதிய சிஇஓவாக இந்திய பெண் குஞ்சன் கேதியா நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் முன்னணி வங்கியான யு.எஸ்.பான்கார்ப் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) உள்ள ஆண்டி செசர் செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, புதிய சிஇஓ-வாக குஞ்சன் கேதியா (54) நியமிக்கப்பட்டுள்ளார். வரும் ஏப்ரல் 15-ம் தேதி நடைபெறவுள்ள வருடாந்திர பங்குதாரர்கள் கூட்டத்துக்குப் பிறகு இவர் பொறுப்பேற்றுக் கொள்வார். இந்த வங்கியின் சிஇஓ பொறுப்பு வகிக்கப் போகும் முதல் இந்திய-அமெரிக்கர் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு முதல் குஞ்சன் கேதியா இந்த வங்கியில் பணியாற்றி வருகிறார். நிதி சேவை துறையில் சுமார் 30 ஆண்டுகள் அனுபவம் பெற்றுள்ளார். குறிப்பாக, ஸ்டேட் ஸ்ட்ரீட் பினான்சியல், பிஎன்ஒய் மெல்லன், மெக்கின்சி அன்ட் கம்பெனி மற்றும் பிடபிள்யுசி உள்ளிட்ட நிறுவனங்களில் உயர் பதவி வகித்துள்ளார். அமெரிக்க வங்கி ஊழியர்களில் அதிகாரம் மிக்க பெண்கள் பட்டியலில் 7 முறை இடம்பிடித்துள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த கேதியா, டெல்லி ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் கல்லூரியில் இளநிலை பொறியியல் பட்டமும் அமெரிக்காவின் கார்னேஜி மெல்லன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும் பெற்றுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment