Published : 31 Jan 2025 02:17 AM
Last Updated : 31 Jan 2025 02:17 AM

காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து 110 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்கிறது இஸ்ரேல்

காசா போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளதையடுத்து 110 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிக்க உள்ளது. இதற்கு பதிலாக, ஹமாஸின் பிடியில் உள்ள 5 தாய்லாந்து கைதிகள் உட்பட 8 பேரை அந்த அமைப்பினர் விடுதலை செய்கின்றனர்.

கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். அப்போது ஏராளமானோரை அவர்கள் பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதையடுத்து, இஸ்ரேல் காசாவில் நடத்திய பதிலடி தாக்குதலில் 40,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல மாதங்கள் நீடித்த கொடூரமான மற்றும் அழிவுகரமான இந்தப் போரால் 90 சதவீத காசா மக்கள் வீடுகளை இழந்து தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையி்ல், உலக நாடுகளின் உதவியால் இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதையடுத்து, இருதரப்பிலும் பல கட்டங்களாக பிணைக் கைதிகள் அடுத்தடுத்து விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, தங்களின் பிடியில் இருந்த இஸ்ரேலிய பெண் ராணுவ வீரர் அகம் பெர்ஜரை (20) ஹமாஸ் அமைப்பினர் காசா முனைப் பகுதியில் செஞ்சிலுவை சங்கத்திடம் நேற்று ஒப்படைத்தனர். அவரைத் தவிர, இஸ்ரேலைச் சேர்ந்த அர்பெல் யெஹுத் என்ற 29 வயது வாலிபரையும், காடி மோசஸ் என்ற 80 வயது முதியவரையும், மேலும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 5 பேரையும் ஹமாஸ் அமைப்பினர் விரைவில் விடுவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், விடுவிக்கப்படும் தாய்லாந்து கைதிகள் குறித்து எந்த அடையாளங்களும் வெளியிடப்படவில்லை. இதற்கு பதிலாக, இஸ்ரேலின் பிடியில் உள்ள 110 பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x