Published : 06 Nov 2024 08:10 AM
Last Updated : 06 Nov 2024 08:10 AM

ட்ரம்ப் வெற்றி; கமலாவுக்கு ஏமாற்றம் - அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் ட்ரம்ப்பின் வெற்றி, ஜனநாயகக் கட்சிக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

எலெக்டோரல் காலேஜ் (வாக்காளர் குழு) பொறுத்தவரையில் ட்ரம்ப வெற்றி பெற்றார். 270 என்ற எண்ணிக்கை தேவை என்ற நிலையில், இந்திய நேரப்படி பிற்பகல் 4 மணியளவில் அவருக்கு 276 வாக்காளர் குழு ஆதரவு கிடைத்துள்ளது. கமலா ஹாரிஸ் 219 பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ‘எலக்டோரல் காலேஜ்' (வாக்காளர் குழு) நடைமுறை பின்பற்றப்படுகிறது. அந்த நாட்டில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன. அந்தந்த மாகாணங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப வாக்காளர் குழு உறுப்பினர்கள் இருப்பார்கள்.சிறிய மாகாணங்களில் 1 முதல் பெரிய மாகாணமான கலிபோர்னியாவில் 55 வரை வாக்காளர்கள் குழு உறுப்பினர்கள் உள்ளனர்.

ஒட்டுமொத்தமாக 538 வாக்காளர்கள் குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் குறைந்தது 270 உறுப்பினர்களின் ஆதரவை பெறும் வேட்பாளர், அதிபர் தேர்தலில் வெற்றி பெற முடியும். அந்த வகையில், ட்ரம்ப் 276, கமலா ஹாரிஸ் 219 என்ற எண்ணிக்கையை வசப்படுத்தி உள்ளனர். ட்ரம்ப் வெற்றி பெற்று மீண்டும் அதிபராகிறார்.

ஒரு மாகாணத்தில் குறிப்பிட்ட கட்சியின் வேட்பாளர் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றால், அந்த மாகாணத்தின் ‘எலக்டோரல் காலேஜ்' வாக்குகள் முழுவதும் வெற்றி வேட்பாளரை சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது. மாகாண வாரியாக வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

‘கை கொடுத்த ஸ்விங் மாகாணங்கள்’ - அமெரிக்காவின் 50 மாகாணங்களில் அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, நார்த் கரோலினா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகியவை அணி மாறும் மாகாணங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த 7 மாகாணங்களின் மக்கள், ஒருமுறை குடியரசு கட்சிக்கும், மறுமுறை ஜனநாயக கட்சிக்கும் மாறி மாறி வாக்களிக்கின்றனர். இந்த 7 மாகாணங்களிலும் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்: அதிபர் தேர்தலுடன் அந்த நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபைக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. மொத்தம் 435 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இந்த அவையில் பெரும்பான்மையை எட்ட 218 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. தற்போதைய நிலவரப்படி, ட்ரம்பின் குடியரசுக் கட்சி 201 தொகுதிகளையும், கமலா ஹாரிஸின் ஜனநாயகக் கட்சி 177 தொகுதிகளையும் வசப்படுத்துகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. அமெரிக்காவின் 47-வது அதிபர் தேர்தலில் மொத்தம் 186 மில்லியன் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது. அந்த நாட்டின் 50 மாகாணங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. சுமார் 95 சதவீத இடங்களில் வாக்கு சீட்டு நடைமுறையிலும், மீதமுள்ள 5 சதவீத இடங்களில் மின்னணு முறையிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்கூட்டியே வாக்களிக்கும் வசதி உள்ளது. இதன்படி வாக்குப்பதிவு நாளுக்கு முன்பே 8.2 கோடி பேர் வாக்களித்திருந்தனர். அதாவது 40 சதவீதம் பேர் முன்கூட்டியே தங்கள் வாக்கை செலுத்திவிட்டனர். மீதமுள்ள வாக்காளர்கள் நேற்று தங்கள் வாக்கை செலுத்தினர்.

அமெரிக்காவில் அதிபர் வேட்பாளருக்கு மக்கள் நேரடியாக வாக்களிப்பது இல்லை. அதற்கு பதிலாக 'எலக்டோரல் காலேஜ்' (வாக்காளர் குழு) உறுப்பினர்களுக்கு வாக்களிப்பார்கள். அமெரிக்காவின் 50 மாகாணங்களில் ஒட்டுமொத்தமாக 538 வாக்காளர் குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 270 வாக்காளர் குழு உறுப்பினர்களின் வாக்குகளை பெறும் வேட்பாளர், அதிபர் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x