Published : 19 Oct 2024 10:58 AM
Last Updated : 19 Oct 2024 10:58 AM

“நாங்கள் அமைதி வழியையே விரும்பினோம்; ஆனால் உக்ரைன் தான்..” - போர் குறித்து புதின் கருத்து

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்

மாஸ்கோ: “அமைதி வழியையே நாங்கள் விரும்பினோம்; ஆனால் உக்ரைன் தான் எங்களுடனான பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்ட்து என்று” உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். கடந்த 2022 பிப்ரவரி முதல் ரஷ்யா - உக்ரைன் போர் நீடித்துவரும் நிலையில் புதின் இவ்வாறு கூறியுள்ளார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய கூட்டமைப்பு `பிரிக்ஸ்' (BRICS) என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கூட்டமைப்பின் மாநாடு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான பிரிக்ஸ் அமைப்பின் 16-வது உச்சிமாநாடு ரஷ்யாவின் தலைமையில் நடைபெற உள்ளது. ரஷ்யாவில் உள்ள காசான் பகுதியில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெறுகிறது.

இதனை ஒட்டி ஊடகங்களுக்குப் பேட்டியளித்துள்ள ரஷ்ய அதிபர் புதின் கூறியதாவது: உக்ரைனுடனான பிரச்சினையை அமைதி வழியில் தீர்க்கவே நாங்கள் விரும்பினோம். ஆனால் உக்ரைன் தான் அமைதிப் பேச்சுவார்த்தையை துண்டித்துக் கொண்டது. இந்தப் பிரச்சினை வலுக்க அமெரிக்கா தான் காரணம். உலக நாடுகள் பலவும், ஏன் அமெரிக்காவின் பாரம்பரிய கூட்டாளிகள் கூட இப்போதெல்லாம் அமெரிக்க டாலரை வைத்து பொருளாதாரத்தை நிர்ணயிப்பதில் இருந்து பின் வாங்குகின்றனர். சீனா மிகப்பெரிய பொருளாதாரமாக வளர்ந்து வருகிறது. சீனாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. ரஷ்யாவும் - சீனாவும் ஒரு தனித்துவ உறவைப் பேணுகிறது. எங்களது உறவு சர்வதேச ஸ்திரத்தன்மையை நிர்ணயிக்கிறது.

மேலும் பிரிக்ஸ் என்பது மேற்கத்திய நாடுகளுக்கு எதிரானது அல்ல. இந்தியப் பிரதமர் மோடி கூறியதுபோல் இது மேற்கத்திய நாடுகளின் பிரதிநிதித்துவம் இல்லாத ஓர் அமைப்பு. பிரிக்ஸ் உலகளாவிய தெற்கு, தென்கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் வளர்ச்சியில் கவனத்தை குவிக்கிறது. பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் குறிப்பிடத்தக்க நிலப்பரப்பையும், மக்கள் தொகையையும் கொண்டுள்ளன. பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவு குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டு வருகிறது. சர்வதேச பொருளாதாரத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கிய பங்களிப்பு செய்யும் நாடுகளாக உருவெடுத்து வருகிறது. இவ்வாறு புதின் கூறினார்.

இந்தியப் படங்களுக்குப் பாராட்டு: பிரிக்ஸ் நாடுகள் ரஷ்யாவில் படப்பிடிப்பு நடத்த ஊக்குவிக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்க, அதற்கு புதின், “பிரிக்ஸ் உறுப்பு நாடுகளில் இந்தியப் படங்கள் ரஷ்யாவில் மிகவும் பிரபலம். இங்கே நிறைய இந்தியப் படங்களின் படப்பிடிப்பு நடக்கிறது. மேலும் இந்திய திரைப்படங்களை திரையிடவே பிரத்யேக தொலைக்காட்சியும் ரஷ்யாவில் உள்ளது. நாங்கள் ரஷ்ய திரைப்பட விழா ஆண்டுதோறும் நடத்துகிறோம். இந்த ஆண்டு பிரிக்ஸ் திரைப்பட விழாவும் நடத்தவிருக்கிறோம். அதில் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இந்திய திரைத்துறை விரும்பினால் அவற்றை இங்கே மேலும் ஊக்குவிக்கும் சாத்தியக்கூறுகளை ஆராய்வோம்” என்று கூறியுள்ளார்.

ரஷ்யா செல்லும் மோடி: இந்நிலையில் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு, ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி, ரஷ்யாவுக்குச் செல்ல உள்ளார். தனது பயணத்தின்போது, பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்த இருக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x