Published : 30 Sep 2024 04:22 AM
Last Updated : 30 Sep 2024 04:22 AM

ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் இருப்பிடத்தை காட்டி கொடுத்த ஈரான் உளவாளி

பெய்ரூட்: ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் பதுங்குமிடத்தை ஈரானை சேர்ந்த உளவாளி காட்டிக் கொடுத்துள்ளார்.

லெபனான் நாட்டில் கடந்த 1985-ம் ஆண்டில் ஹிஸ்புல்லா அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்புக்கு ஈரானும் சிரியாவும் ஆயுத உதவி, நிதியுதவி அளித்தன. இரு நாடுகளின் உதவியால் ஹிஸ்புல்லா குறுகிய காலத்தில் வளர்ச்சிஅடைந்தது. கடந்த 2006-ம் ஆண்டில்ஹிஸ்புல்லாவுக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே 34 நாட்கள் போர் நடைபெற்றது. அப்போது ஐ.நா. சபை தலையிட்டதால் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

ஈரான், சிரியாவின் ஆதரவுடன் ஹிஸ்புல்லா மீண்டும் தலைதூக்கியது. அந்த அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா, லெபனானின் ரகசிய இடங்களில் தலைமறைவாக வாழ்ந்து வந்தார். ஈரானின் மூத்த தலைவர்கள், ஹிஸ்புல்லாவின் மூத்த தலைவர்களுக்கு மட்டுமே அவரின் இருப்பிடம் தெரியும்.

இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் உளவாளிகள் ஈரான்மற்றும் லெபனானில் உள்ளனர். அவர்கள் மூலம் ஹசன் நஸ்ரல்லாவின் பதுங்குமிடம் குறித்த தகவல்களை இஸ்ரேல் ராணுவம் சேகரித்து வந்தது. இந்த சூழலில்பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லாவின் தலைமை அலுவலகத்தில் ஹசன் பதுங்கியிருப்பது உளவாளிகள் மூலம் இஸ்ரேலுக்கு தெரியவந்தது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லாவின் தலைமை அலுவலகம் செயல்பட்டது. இதுபூமிக்கு அடியில் சுமார் 60 அடிஆழத்தில் அமைக்கப்பட்டு இருந்தது. அதன் மேற்பகுதியில் பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு இருந்தது.

‘‘பெய்ரூட்டில் உள்ள சுரங்க அலுவலகத்தில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா தங்கியிருக்கிறார். அடுத்த சில நாட்களில்அவர் வேறு இடத்துக்கு மாறிவிடுவார்’’ என்று ஈரானில் உள்ள மொசாட் உளவாளி இஸ்ரேல் ராணுவத்துக்கு உறுதியான தகவல்அளித்தார். அமெரிக்காவில் முகாமிட்டிருந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. ஹசன் நஸ்ரல்லா மீது உடனடியாக தாக்குதல் நடத்த நெதன்யாகு உத்தரவிட்டார். அடுத்த சில நிமிடங்களில் இஸ்ரேல் விமானப் படையின் போர் விமானங்கள் பெய்ரூட் நோக்கிசீறிப் பாய்ந்தன. அமெரிக்க தயாரிப்பான ஜிபியு-31 ஜேடிஏஎம் ரககுண்டுகள், இஸ்ரேல் தயாரிப்பான ஸ்பைஸ்-200 ரக குண்டுகள் ஹிஸ்புல்லா தலைமை அலுவலகத்தின் மீது அடுத்தடுத்து வீசப்பட்டன.

மொத்தம் 80 குண்டுகள்: மொத்தம் 80 குண்டுகள் ஹிஸ்புல்லாவின் சுரங்க அலுவலகத்தை துளைத்து வெடித்து சிதறின. ஒவ்வொரு குண்டும் தலா ஒரு டன் எடை கொண்டதாகும். இந்த தாக்குதலில் சுரங்க அலுவலகம் மண்ணோடு, மண்ணானது. 65 அடி ஆழத்துக்கு மிகப்பெரிய பள்ளம் உருவானது. ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா உட்பட ஏராளமானோர் சம்பவஇடத்திலேயே உயிரிழந்தனர். அந்த அமைப்பின் புதிய தலைவராக ஹஷேம் சபிதீன் பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் ஈரானுக்கு மிகவும் நெருக்கமானவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x