Published : 24 Sep 2024 07:20 PM
Last Updated : 24 Sep 2024 07:20 PM

2009-ல் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளரின் மகள் நீதி கேட்டு இலங்கையின் புதிய அதிபருக்கு கோரிக்கை

தனது தந்தை லசந்த விக்கிரமதுங்கவின் படத்துடன் அஹிம்சா.

ராமேசுவரம்: இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்கவுக்கு நீதி வழங்க வேண்டும் என அவரது மகள் அஹிம்சா, இலங்கையின் புதிய அதிபர் அநுர குமார திசாநாயக்கவுக்கு உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையின் உள்நாட்டு போரின்போது இலங்கை அரசையும், தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதையும் தீவிரமாக எதிர்த்து கருத்துகளை வெளியிட்ட பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலகி ராணுவத்தில் சரணடைந்த பலர் மர்மான முறையில் உயிரிழந்தனர். இலங்கையின் தலைநகரான கொழும்புவில் வெளிவந்த முன்னணி ஆங்கில வார பத்திரிகையான ‘சண்டே லீடர்’-ல் ஆசிரியராக பணிபுரிந்தவர் லசந்த விக்கிரமதுங்க. இவர் கடந்த 05.01.2009 அன்று கொழும்புவில் உள்ள அவரது அலுவலகத்துக்கு வரும் வழியில், நான்கு பேரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

லசந்த விக்கிரமதுங்க, இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது தமிழர்களுக்கு இழைக்கப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்தும், அப்போதைய அதிபர் மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிராகவும் தொடர்ந்து சண்டே லீடரில் எழுதி வந்தார். இதனால் அவரது படுகொலைக்கு முன்பாகவே இரண்டு முறை அவர் மீது கொடூரமான தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. லசந்த விக்கிரமதுங்க தான் கொல்லப்பட்டால் அரசுதான் அந்த கொலையைச் செய்திருக்கும்,எனவும் கூறியிருந்தார்.

லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு 7 ஆண்டுகள் கழித்து 2016-ம் ஆண்டில் அப்போதைய அதிபரான மைத்திரிபால சிறிசேனா ஆட்சிக்காலத்தில் பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை குறித்து போலீஸ் குற்ற புலனாய்வு துறை விசாரணைகளை மேற்கொள்ள துவங்கியது. ஆனால், தற்போது வரையிலும் நீதி கிடைக்கவில்லை. இந்நிலையில், இலங்கையில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அதிபராக நேற்று (செப்.23) அநுர குமார திசாநாயக்க பதவியேற்றுள்ளார்.

அதிபர் அநுர குமார திசாநாயக்கவுக்கு லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அஹிம்சா அறிக்கையின் மூலமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், “அதிகாரத்துக்கு முன்னால் உண்மையைப் பேசியதற்காக 15 வருடங்களுக்கு முன்னர் நியாயமற்ற முறையில் படுகொலை செய்யப்பட்ட எங்கள் தந்தையின் உயிருக்கு நீதியை பெற்றுக்கொள்வது குறித்து நானும் எனது குடும்பத்தாரும் தளராத உறுதியுடன் உள்ளோம்.

கடந்த 15 வருடங்களாக ஆட்சியில் உள்ள அரசாங்கங்கள் எனது தந்தையின் படுகொலை குறித்து ஆக்கபூர்வமான நடவடிக்கையை எடுக்க தவறிவிட்டன. ஜே.வி.பி வரலாற்று ரீதியில் அதிகார வர்க்கத்தினை கடுமையாக விமர்சித்து வந்துள்ளது. இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், மக்களுக்கு எதிரான அநீதிகளுக்கு புதிய அரசு தீர்வு காணும், என நம்புகிறோம்.

மகிந்த ராஜபக்சவின் பயங்கரவாத ஆட்சியின் கீழ் பயங்கரமான இழப்புகளை சந்தித்த எனது தந்தைக்கும் ஏனைய குடும்பங்களுக்கும் நீதி வழங்க வேண்டும். இலங்கையில் நீதியையும் பொறுப்புக் கூறலையும் நிலைநாட்டுவதற்காக நாங்கள் இந்த புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட ஆர்வமாக உள்ளோம்.நீதிக்கான பாதை நீண்டமானது கடினமானது என்ற போதிலும் எனது தந்தைக்கான எனது போராட்டத்தில் அவரது பாரம்பரியத்தை கவுரவிப்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்,” எனறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x