Published : 24 Sep 2024 08:39 AM
Last Updated : 24 Sep 2024 08:39 AM

இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் பலி 492 ஆக அதிகரிப்பு; காயம் 1,500 - ஹிஸ்புல்லா 200 ராக்கெட்டுகளை ஏவி பதிலடி

ஹிஸ்புல்லாக்களை குறிவைத்து லெபனான் நாட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 490-ஐ கடந்துள்ளது. இதில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர். 1500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாக்கள் இரவோடு இரவாக 200-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவியுள்ளனர்.

இஸ்ரேலின் ராணுவ, விமானப்படை தளங்களை குறிவைத்து இந்த ராக்கெட்டுகளை ஏவியதாக ஹிஸ்புல்லா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஹிஸ்புல்லாக்களின் ஆயுதக் கிடங்குகள் அமைந்துள்ள தெற்கு, கிழக்கு லெபனானில் மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இஸ்ரேல் காசா மீது கடந்த அக்டோபர் தொடங்கி கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ்களை முழுமையாக அழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியிலும் இஸ்ரேல் பிடிவாதம் காட்டி வருகிறது. இந்நிலையில், தற்போது சுதந்திரமான பாலஸ்தீன மண்ணுக்கு ஆதரவாக இயங்கும் ஈரான் ஆதரவு கொண்ட ஹிஸ்புல்லாக்களை எதிர்த்து தற்போது லெபனான் மீதும் தாக்குதலை வலுப்படுத்தி வருகிறது இஸ்ரேல். இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் மேலும் வலுப்பெற்றுள்ளது. இது சர்வதேச அளவில் அச்சத்தைக் கடத்தியுள்ளது.

2006-க்குப் பின்னர்.. இஸ்ரேல் ராணுவம் மற்றும் லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 17-ம் தேதி ஹிஸ்புல்லா இயக்கத்தினர் பயன்படுத்திய 5,000 பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறின. இதில் பலர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது மிகப் பெரிய அளவில் தாக்குதல் நடத்துவோம் என்று ஹிஸ்புல்லா அமைப்பு எச்சரிக்கை விடுத்தது.

இதனைத் தொடர்ந்து, சில தினங்களுக்கு முன்பு லெபனானில் ஹிஸ்புல்லா இயக்கத்தினரைக் குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர். இவ்வாறு மோதல் நீடித்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில், லெபனானில் புதிதாக இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 492 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெண்கள், குழந்தைகளும் அடங்குவர். மேலும், 1500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2006 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் இப்போதைய மோதல்தான் மிகக் கொடூரமானதாகக் கருதப்படுகிறது.

வெளியேறும் மக்கள்: சாரை சாரையாக பெயரும் மக்கள்: இஸ்ரேல் ராணுவம் தெற்கு, கிழக்கு லெபனானில் கடும் தாக்குதலைத் தொடங்கியுள்ள நிலையில் தெற்குப் பகுதியின் துறைமுக நகரான சிடோனில் இருந்து மக்கள் குடும்பம் குடும்பமாக உடைமைகளுடன் பெயரத் தொடங்கியுள்ளது. தலைநகர் பெய்ரூட் நோக்கி மக்கள் பெயர்ந்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x