Published : 20 Sep 2024 04:06 AM
Last Updated : 20 Sep 2024 04:06 AM

புதினுடன் பேசுங்கள் அல்லது அணு ஆயுத போரை எதிர்கொள்ளுங்கள்: அமெரிக்க அரசுக்கு ட்ரம்ப் மகன் எச்சரிக்கை

வாஷிங்டன்: ரஷ்யா, உக்ரைன் இடையே கடந்த 2022 பிப்ரவரி மாதம் முதல் போர் நடந்து வருகிறது. இந்த போரில் உக்ரைன் ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்களையும் நிதியுதவியையும் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் அளித்து வருகின்றன.

தற்போதைய சூழலில் நீண்ட தொலைவு பாயும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கவில்லை. சில ஏவுகணைகளை வழங்கியிருந்தாலும் அவற்றை ரஷ்யாவுக்கு எதிராக பயன்படுத்த அமெரிக்கா அனுமதி வழங்கவில்லை. இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டாமரும் அண்மையில் ஆலோசனை நடத்தினர். இதுகுறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறும்போது, “நீண்ட தொலைவு ஏவுகணைகளை உக்ரைன் ராணுவம் பயன்படுத்த அனுமதி வழங்கினால் அமெரிக்காவும், நேட்டோ அமைப்பும் ரஷ்யாவுக்கு எதிராக போர் தொடுத்ததாக கருதுவோம். இதற்கு தகுந்த பதிலடி கொடுப்போம்" என்று எச்சரித்தார்.

இந்த சூழலில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்பின் மகன் டொனால்டு ஜான் ட்ரம்ப் ஜூனியர் மற்றும் முன்னாள் அதிபர் கென்னடியின் குடும்பத்தை சேர்ந்த ராபர்ட் எப் கென்னடி ஜூனியர் ஆகியோர் ‘தி ஹில்' நாளிதழில் எழுதிய தலையங்க கட்டுரையில் கூறியிருப்பதாவது: ரஷ்யாவின் உள்பகுதிகளை தாக்கும் திறன் கொண்டநேட்டோவின் நீண்ட தொலைவு பாயும் ஏவுகணைகளை உக்ரைன் ராணுவம் பயன்படுத்த அனுமதி வழங்குவது குறித்து அமெரிக்க அதிபர் பைடன் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. இந்தமுடிவு அணு ஆயுத போருக்கு வழிவகுக்கும். பைடன்- கமலா ஹாரிஸ் நிர்வாகம் தவறான கொள்கையை பின்பற்றி வருகிறது. இந்த கொள்கையை கைவிட்டு,போருக்கு முற்றுப்புள்ளிவைக்க ராஜ்ஜிய ரீதியிலான பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எப் கென்னடி கடந்த 1963-ம் ஆண்டு கூறும்போது, “அணு ஆயுத பலம் கொண்ட நாடுகள் மோதலை தவிர்க்க வேண்டும். அணு ஆயுத போரை முழுமையாக தவிர்க்கவேண்டும்" என்றார். ரஷ்யாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று ரஷ்ய அதிபர் புதின் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளார். பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதங்களை நிறுவவும் அவர் ஒப்பந்தம் செய்துள்ளார்.

அமெரிக்காவை குறிவைத்து தாக்குதல் நடத்த ஏதாவது ஒரு நாட்டுக்கு ரஷ்யா ஏவுகணைகளை வழங்கினால், அதை அமெரிக்க அரசு ஏற்றுக்கொள்ளுமா? இதை அமெரிக்க ஆட்சியாளர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். ரஷ்ய பகுதிகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு அனுமதி வழங்கப்பட்டால் ரஷ்ய அரசு நிச்சயமாக பொறுத்துக் கொள்ளாது. மிகப்பெரிய அளவில் போர் வெடிக்கும். ரஷ்யாவை பலவீனப்படுத்த வேண்டும். உக்ரைனின் இயற்கை வளங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அமெரிக்க அரசு போரை தீவிரப்படுத்தினால் மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் அமெரிக்க அரசு நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் அல்லது அணு ஆயுத போரை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். அணு ஆயுத போர் மூண்டால் உக்ரைன் மட்டுமன்றி அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளும் மிகக் கடுமையாக பாதிக்கப்படும். அமெரிக்க அதிபர் பைடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x