Published : 19 Sep 2024 04:20 AM
Last Updated : 19 Sep 2024 04:20 AM

உணவு பொட்டலங்களில் பயன்படுத்தும் 3,600 வகை ரசாயனம் மனித உடலில் கலப்பு: மலட்டுத் தன்மை ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் தகவல்

சூரிச்: பிளாஸ்டிக், காகிதம், கண்ணாடி, உலோகம் உள்ளிட்டவற்றில் உள்ள ரசாயனங்கள் உணவு பண்டங்களில் கண்ணுக்குத் தெரியாமல் கலந்து வருவது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ‘எக்ஸ்போசர் சயின்ஸ் அண்டு என்விரான்மென்ட்டல் எபிடமியாலஜி’ என்ற இதழில் ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது.

இதுகுறித்து சுவிட்சர்லாந்து சூரிச் நகரில் உள்ள உணவு பேக்கேஜிங் கூட்டமைப்பு அறக்கட்டளையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் பிர்கிட் கியூக்கி கூறியதாவது: உணவுடன் தொடர்புடைய ரசாயனங்களில் 100 வகை ரசாயனங்கள் மனித ஆரோக்கியத்துக்கு மிகவும் ஆபத்தானவையாக வரையறுக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒட்டாமல் சமைக்க உதவும் பாத்திரங்களில் பூசப்படும் பிஎஃப்ஏ நுண்பொருட்கள் (PFAS), குளிர்பானங்கள் உள்ளிட்ட உணவு பண்டங்களை பொட்டலம் போடத் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் குடுவைகளில் உள்ள பிஸ்ஃபெனால் ஏ (bisphenol A) உள்ளிட்டவை மனித உடலில் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இவை மட்டுமல்லாமல் உணவைஉட்கொள்ளும்போது சாப்பாட்டுடன் சேர்ந்து நம் உடலில் வேறு பல ரசாயனங்கள் கலக்கின்றன. இந்த கோணத்தில் ஆராய்ந்தபோதுதான் 3,601 விதமான ரசாயனங்கள் உணவு வழியாக மனித உடலில் கலப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இவற்றால் பல்வேறு உடல் உபாதைகள் உண்டாகும் அபாயம் உள்ளது. குறிப்பாக பிஸ்ஃபெனால் ஏ மனித உடலில் கலப்பதால் ஹார்மோன் கோளாறுகள் ஏற்படும் ஆபத்திருப்பதால் பல நாடுகளில் குழந்தைக்கான பால் புட்டியில் இந்த ரசாயனம் சேர்க்கப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று மலட்டுத்தன்மை உண்டாக்கும் ஆபத்தான ஃபேலேட்ஸ் (phthalates) ரசாயனமும் உணவு மூலமாக நம் உடலில் கலக்கிறது.

இந்த ஆபத்திலிருந்து தப்பிக்க உணவுப்பொருட்களை கடையிலிருந்து வாங்கி வந்தவுடன் அவற்றை பொட்டலங்களில் இருந்து பிரித்தெடுத்து வீட்டில் உபயோகிக்கும் பாத்திரங்களுக்கு மாற்றுவது உகந்தது. முக்கியமாக பிளாஸ்டில், அலுமினியம் ஃபாயில் காகிதங்களில் வாங்கி வந்த உணவு பண்டங்களை அப்படியே சூடேற்றி உட்கொள்வதை அறவே தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x