Published : 13 Sep 2024 12:09 PM
Last Updated : 13 Sep 2024 12:09 PM

கமலா ஹாரிஸுடன் மற்றொரு நேரடி விவாதத்தில் பங்கேற்க மாட்டேன்: ட்ரம்ப்

டொனால்ட் ட்ரம்ப்

நியூயார்க்: ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸுடனான மற்றொரு நேரடி விவாதத்தில் பங்கேற்க மாட்டேன் என குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப், இரண்டு நேரடி விவாதங்களில் பங்கேற்றார். கடந்த ஜூன் மாதம் அதிபர் ஜோ பைடன் உடனும், அண்மையில் கமலா ஹாரிஸ் உடனும் அவர் நேரடி விவாதத்தில் பங்கேற்றார். ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜோ பைடன், அதிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதையடுத்து கமலா ஹாரிஸ் அக்கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

மூன்றாவது விவாதத்துக்கு கமலா ஹாரிஸ் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இருப்பினும் அதில் பங்கேற்க மாட்டேன் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். “வாக்காளர்களுக்காக மேலும் ஒரு விவாதம் மேற்கொள்ள வேண்டும்” என வியாழக்கிழமை அன்று சார்லோட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கமலா ஹாரிஸ் தெரிவித்தார். இந்த சூழலில் தான் ட்ரம்ப் அதற்கு மறுத்து தெரிவித்துள்ளார்.

“மூன்றாவது விவாதம் என்பது இருக்காது. கடந்த நான்கு ஆண்டு காலத்தில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் என்ன செய்தார் என்பதில் கவனம் செலுத்த வேண்டி உள்ளது. குத்துச்சண்டை அல்லது ரெஸ்லிங் போட்டிகளில் போட்டியிடுபவர் தோல்வியை தழுவினால் ‘ரீ-மேட்ச்’ வேண்டும் என சொல்வது வழக்கம். விவாத நிகழ்வும் அது போல தான். அன்று நடைபெற்ற விவாதத்தில் அவர் தோல்வியை தழுவினார். அனைத்து கருத்துக் கணிப்பு முடிவுகளும் எங்களுக்கு சாதகமாக இருந்தது” என ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதள பதிவில் கூறியுள்ளார்.

இருப்பினும் டொனால்ட் ட்ரம்ப் உடனான விவாதத்தில் வெற்றியாளர் கமலா ஹாரிஸ் தான் என்பதை பல்வேறு கருத்துக் கணிப்பு முடிவுகள் உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x