Published : 25 Aug 2024 04:26 PM
Last Updated : 25 Aug 2024 04:26 PM

இஸ்ரேல் மீது தீவிர தாக்குதலை தொடங்கிய ஹிஸ்புல்லா அமைப்பு - பதிலடி கொடுக்கும் இஸ்ரேல்

ஜெருசலேம்: இஸ்ரேலின் ராணுவத் தளங்களைக் குறிவைத்து 300 க்கும் அதிகமான ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாக ஹிஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ளது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல், தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

லெபனானை அடிப்படையாகக் கொண்ட ஹில்புல்லா அமைப்பு, இஸ்ரேல் மீது பெரிய அளவிலான ராணுவத் தாக்குதலை இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேற்கொண்டது. ஈரான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேல் ராணுவத்தளங்களைக் குறிவைத்து 300 க்கும் அதிகமான ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதலை தொடுப்பதற்கு முன்பாகவே, லெபனான் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக ஹிஸ்புல்லாக்கள் பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதை நாங்கள் முன்கூட்டியே கண்டறிந்தோம். இஸ்ரேலிய மக்கள் மீதான அச்சுறுத்தலை தணிக்கும் விதமாக, இஸ்ரேலிய ராணுவ விமானங்கள் ஹில்புல்லாக்களின் இலக்குகளை நோக்கி நிலைநிறுத்தப்பட்டுள்ளன. மேலும், தெற்கு லெபனானில், வடக்கு மற்றும் மத்திய இஸ்ரேல் பகுதிகளை இலக்காக கொண்ட ஹிஸ்புல்லாக்களின் நூற்றுக்கணக்கான ராக்கெட் லாஞ்சர்களை எங்கள் விமானங்கள் தாக்கி அழித்தன என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சுமார் 100 ஐஏஎஃப் போர் விமானங்கள், தெற்கு லெபனானில் உள்ள ஹில்புல்லாக்களின் ராக்கெட் லாஞ்சர்களை தாக்கி அழித்தன. இவைகளில் பல வடக்கு இஸ்ரேல் மற்றும் மத்திய இஸ்ரேலை குறிவைத்து இருந்தன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிஸ்புல்லா ராணுவத் தளபதி கடந்த மாதம் ஈரானில் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கப்போவதாக ஹிஸ்புல்லா அமைப்பும், ஈரானும் அறிவித்திருந்த நிலையில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன.

ராணுவத்தளபதியின் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில், இஸ்ரேலின் உள் பகுதிகளை இலக்காகக் கொண்டு பெரிய அளவிலான ட்ரோன் தாக்குதல்களைத் தொடங்கியதாக ஹிஸ்புல்லாக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், "அதிக அளவிலான எதிரிகளின் நிலைகள் மற்றும் ராணுவத்தளங்கள் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளன. முழு அளவிலான ராணுவத்தாக்குதல் நடத்த சிறிது காலம் எடுக்கும்" என்று ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே, இஸ்ரேல் பிரதமர் நெதான்யாகு அலுவலக அறிக்கையின் படி, "இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர், அடுத்த 45 மணி நேரத்துக்கு அவசரநிலையை அறிவித்துள்ளார். ஹோம் ஃப்ரண்ட் என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படும் இந்தச் சிறப்பு சூழ்நிலை, பொதுமக்கள் மீது கட்டுப்பாடுகளை விதிக்க ஐடிஎஃப் ஹோம் ஃப்ரண்ட்-க்கு அதிகாரம் அளிக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிராந்தியத்தில் அதிகரித்துள்ள பதற்றத்துக்கு பதில் அளித்துள்ள அமெரிக்கா, இஸ்ரேலின் தற்காப்பு நடவடிக்கைக்கு தொடர்ந்து ஆதரவளிப்பாதக தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர், சீன் சேவேட் கூறுகையில், "அதிபர் ஜோ பைடனின் வழிகாட்டுதல் படி, அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள், இஸ்ரேலில் உள்ள அதிகாரிகளுடன் தொடந்து தொடர்பில் உள்ளனர். தங்களைத் தற்காத்துக் கொள்ளும் இஸ்ரேலின் உரிமையை நாங்கள் தொடர்ந்து ஆதரிக்கிறோம். பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்த நாங்கள் தொடர்ந்து வேலை செய்து வருகிறோம்" என்று தெரவித்துள்ளார்.

காசா போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லாக்களுக்கு இடையேயான இந்த மோதல் போக்கு தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இஸ்ரேல், லெபனான் எல்லையில் தினமும் தாக்குதல் நடந்து வருகிறது. தற்போதைய இந்தத் தாக்குதல் லெபனானில் முழு அளவிலான தாக்குதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் முன்னோடி இல்லாத தாக்குதலால் 1,200 பேர் கொல்லப்பட்டனர் அவர்களில் பலர் பொதுமக்கள். இதனைத் தொடர்நந்து காசா மீது இஸ்ரேல் நடத்திய தொடர் ராணுவ நடவடிக்கைகளால் 40,000 பாலஸ்தீனயர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x