Published : 22 Aug 2024 09:11 AM
Last Updated : 22 Aug 2024 09:11 AM

“அனைத்து நாடுகளின் நலன் சார்ந்து சிந்திக்கிறது இந்தியா” - போலந்தில் பிரதமர் மோடி உரை

போலந்தில் பிரதமர் மோடி

வார்சா: “அனைத்து நாடுகளின் நலன் சார்ந்து சிந்திக்கிறது இந்தியா” என போலந்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அரசுமுறை பயணமாக போலந்து சென்றுள்ள பிரதமர் மோடிக்கு தலைநகர் வார்சாவில் நேற்று சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து போலந்து வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். போலந்து-இந்தியா தூதரக உறவின் 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் மோடியின் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி பேசியதாவது: பல ஆண்டுகளாக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அனைத்து நாடுகளிடமிருந்தும் ஒருவித தூரத்தை கடைப்பிடிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. இப்போது இந்தியாவின் கொள்கை அனைத்து நாடுகளுடனும் நெருக்கமான உறவைப் பேணுவதாக உள்ளது. இந்தியா எல்லோரிடமும் தொடர்பு கொள்ள விரும்புகிறது. இன்றைய இந்தியா அனைத்து நாடுகளின் நலன் சார்ந்து சிந்திக்கிறது. அதனால், உலகம் இந்தியாவை மதிக்கிறது. இந்தியாவை அனைவரின் நண்பர் என்று அறிகிறது. இவ்வாறு பிரதமர் பேசினார்.

ஐரோப்பிய நாடுகளுடனான இந்தியாவின் உறவை பலப்படுத்தும் விதமாக போலந்து - இந்தியா உறவு அமைந்திருக்கிறது. கடந்த 2022ம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நேரத்தில், உக்ரைனிலிருந்த இந்திய மாணவர்களை மீட்க பெரிதும் உதவியது போலந்துதான்.

இதனையும் தனது உரையில் பிரதமர் மோடி தனது பேச்சில் சுட்டிக் காட்டினார். இந்திய மாணவர்களை மீட்க ஏதுவாக போலந்து விசா கொள்கைகளை தளர்த்தியதை பிரதமர் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.

கடந்த 45 ஆண்டுகளில் போலந்து செல்லும் முதல் பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார். கடைசியாக 1979ல் அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் போலந்து சென்றிருந்தார். அதன் பின்னர் போலந்து செல்லும் முதல் பிரதமர் என்கிற பெருமையை மோடி பெற்றுள்ளார்.

மேலும் பிரதமர் தனது உரையில் இதனை சுட்டிக்காட்டிய அவர், “கடந்த சில ஆண்டுகளாக நிறைய முதல்முறை நிகழ்வுகளை நான் செய்யும் நல்வாய்ப்பைப் பெற்றுள்ளேன்” என்றார். அண்மையில் ஆஸ்திரியாவுக்கு செல்லும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையையும் அவர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கும் முன்னதாக இஸ்ரேல் சென்ற முதல் இந்தியப் பிரதமர் என்ற அந்தஸ்தை மோடி பெற்றிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x