Published : 05 Aug 2024 05:55 PM
Last Updated : 05 Aug 2024 05:55 PM

வங்கதேச பிரதமர் மாளிகையை சூறையாடிய போராட்டக்காரர்கள் - நடந்தது என்ன?

டாக்கா: வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் நுழைந்த போராட்டக்காரர்கள், பிரதமர் மாளிகையில் சூறையாடியாதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

மாணவர்கள் போராட்டத்தின் எதிரொலியாக, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டுச் வெளியேறிச் சென்ற நிலையில், ‘இடைக்கால அரசு விரைவாக அமைக்கப்படும்’ என்று அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. இச்சூழலில், புகழ்பெற்ற எழுத்தாளரும், பேராசிரியருமான சலிமுல்லா கான் தலைமையில், வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமையும் என்று வங்கதேச தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளுக்கு மத்தியில், போராட்டக்காரர்கள் வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்துக்குள் நுழைந்து சூறையாடினர். பிரதமர் பதவியை ராஜினாமா செய்து டாக்காவில் இருந்து ராணுவ விமானம் மூலம் நாட்டை விட்டு ஷேக் ஹசீனா வெளியேறிய நிலையில், பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்துக்குள் நுழைந்து கையில் சிக்குவதை எடுத்துக்கொண்டும், சிலர் கோப்புகளை கிழித்தனர்.

கைகளில் தடிகளுடன் அதிகாரிகளின் பாதுகாப்பை மீறி பிரதமர் இல்லத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்து ஆட்டுக்குட்டி, முயல், வாத்து என்று கிடைத்த பொருட்களை எடுத்துச் சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. சிலர், பிரதமரின் நாற்காலியில் அமர்ந்துகொண்டு புகைப்படம் எடுத்தனர். இன்னும் சிலர் அங்கிருந்த உணவுப் பொருட்களை எடுத்து சாப்பிட்டனர். சிலர் பாத்திரங்கள், மேசை விரிப்புகளை எடுத்துச் சென்றனர். இன்னும் சிலர் அங்கிருக்கும் புல்வெளி, அழகான இடங்கள் முன் புகைப்படம் எடுத்தனர். போராட்டக்காரர்களின் செயல்கள் புகைப்படங்கள், வீடியோக்களாக வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றுவருகின்றன.

முன்னதாக, வங்கதேசத்தில் தீவிரமடைந்த மாணவர் போராட்டம் காரணமாக பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை இன்று (திங்கள்கிழமை) ராஜினாமா செய்தார். இதையடுத்து, பகல் 2.30 மணி அளவில் அவர் தனது சகோதரி ஷேக் ரேஹானாவுடன் வங்கதேசத்தின் கனபாபன் என்ற இடத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டுச் சென்றார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படக் காட்சிகள் வெளியாகி உள்ளன. எனினும், அவர்கள் எங்கு சென்றார்கள் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

பின்னணி என்ன? - கடந்த 1971-ம் ஆண்டு வங்க தேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கடந்த ஜூலை மாதம் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர் போராட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் நடத்திய தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதன் தொடர்ச்சியாக, போலீஸை ஏவி போராட்டக்காரர்களைக் கொன்றதற்கு நீதி கேட்டு நேற்று பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், வங்கதேச தலைநகர் டாக்காவின் மத்திய சதுக்கத்தில் குவியத் தொடங்கினர். மேலும், பல்வேறு நகரங்களிலும் வங்கதேச போராட்டம் வெடித்தது. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்த போராட்டக்காரர்கள், இனி மக்கள் யாரும் அரசுக்கு வரி செலுத்தக் கூடாது என்றும், அரசு ஊழியர்கள் மற்றும் மற்றும் ஜவுளித் துறை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றும் நாடு தழுவிய ஒத்துழையாமை போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.

கட்டிடங்கள், வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். போராட்டத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் கையெறி குண்டுகளை வீசினர். போராட்டக்காரர்களும் போலீஸார் மீது பதில் தாக்குதல் நடத்தினர். இதில் போலீஸ் தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி வங்கதேசத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது. ஜூலையில் இருந்து இதுவரையிலான போராட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 300-ஐ கடந்ததும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x