Published : 02 Aug 2024 04:52 PM
Last Updated : 02 Aug 2024 04:52 PM

ஈரானின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவும்: பைடன் உறுதி

வாஷிங்டன்: ஈரானின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக இஸ்ரேலின் பாதுகாப்புக்கான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்கும் என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் உறுதி அளித்துள்ளார்.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே கடந்த புதன்கிழமை படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்குப் பழிவாங்க இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரானிய உச்ச தலைவர் அலி கமேனி அறிவித்தார். இதனால், இஸ்ரேல் - ஈரான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் பேசியதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. "இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் பேசினார். அப்போது, ​​இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் நேரடி தாக்குதல் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அமெரிக்க ராணுவத்தை நிலைநிறுத்துவது குறித்து விவாதித்தார்.

ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் ஹொதிகள் உட்பட ஈரானின் அனைத்து அச்சுறுத்தல்களில் இருந்தும் இஸ்ரேலை பாதுகாப்பதற்கான தனது உறுதிப்பாட்டை அதிபர் பைடன் மீண்டும் உறுதிப்படுத்தினார். இஸ்ரேலின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளோடு, பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றங்களைத் தணிப்பதற்கான தொடர் முயற்சிகளின் முக்கியத்துவத்தையும் அமெரிக்க அதிபர் வலியுறுத்தினார். அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸும் இந்த அழைப்பில் இணைந்தார்" என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஈரான் எத்தகைய தாக்குதல்களை நடத்த முற்பட்டாலும் அதனை எதிர்கொள்ள இஸ்ரேலிய தற்காப்புப் படைகள் தயார் நிலையில் இருப்பதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x