Published : 20 Jul 2024 11:29 AM
Last Updated : 20 Jul 2024 11:29 AM

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலகல்! - குடும்பத்தினர் பரிசீலனை

ஜோ பைடன் | கோப்புப்படம்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து ஜோ பைடன் விலகலாம் என்ற ஊகங்களுக்கு மத்தியில், அவரின் தடுமாற்றமான பிரச்சாரம் காரணமாக, போட்டியில் இருந்து அவர் வெளியேறுவது குறித்து பைடனின் குடும்பத்தினர் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஊகமான வேட்பாளராக இருப்பேன் என்று பைடன் மீண்டும் மீண்டும் வலியுறுத்திய போதிலும், போட்டியில் இருந்து விலகும் உத்தியை துல்லியமாக சரியான நேரத்தில் செயல்படுத்தலாம் என்று அவரது குடும்பத்தினர் யோசித்து வருவதாக இதுகுறித்து விபரம் அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு பைடன் போட்டியில் இருந்து விலகும்பட்சத்தில், அது அவரது ஐந்து தசாப்த பொதுச்சேவையை கவுரவிப்பதோடு மட்டும் இல்லாமல், முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பை வெல்ல ஜனநாயக கட்சியை சிறப்பாக நிலைநிறுத்தவும் செய்யும்.

இந்த விலகல் விவகாரத்தில், ஜோ பைடனின் உடல்நிலை, அவரது குடும்பம், நாட்டின் ஸ்திரத்தன்மை போன்றவை முக்கிய காரணிகளாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்பு நடந்த அதிபர் வேட்பாளர்களுக்கான விவாதத்தில் ஜோ பைடனின் தடுமாற்றத்தைத் தொடர்ந்து, கட்சித் தலைவர்கள், நன்கொடையாளர்கள், பைடனை மீண்டும் தேர்வு செய்த குழுவினரிடையே ஓர் அமைதியின்மை ஏற்பட்டுள்ள நிலையில் இந்த விவகாரம் கவனம்பெற்றுள்ளது.

இதனிடையே, நண்பர்களாக நினைத்தவர்கள் கூட பைடனை நடத்திய விதத்தில் அவரது குடும்பத்தினர் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பைடனின் கூட்டாளி ஒருவர் கூறுகையில், "அவர்கள் இதைச் செய்ய விரும்பினால் அதற்கு கண்ணியமான வழிமுறை இருந்தது. நாட்டிற்கு சேவை புரிந்த ஒரு பொது ஊழியரை நடத்துவதற்கு இது வழிமுறை இல்லை" என்று தெரிவித்தார்.

இதனிடையே, மோட்டனா செனட்டர் ஜோன் டெஸ்டர் மற்றும் கலிஃபோர்னியா ஹவுஸ் பிரதிநிதி ஜிம் கோஸ்டா உள்ளிட்ட மேலும் இரண்டு குடியரசு கட்சி சட்டமியற்றுபவர்கள் ஜோ பைடன் அதிபர் தேர்தலில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். "நாட்டிற்கும், பொதுப் பணிகளுக்கும் அவர் ஆற்றிய சேவையை நான் அங்கீகரிக்கிறேன். என்றாலும் அதிபர் ஜோ பைடன் மீண்டும் ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படக் கூடாது என்று நான் நம்புகிறேன்" என்று டெஸ்ட்ர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் 25 பேர் ஜோ பைடன் அதிபர் தேர்தலில் இருந்து விலக வேண்டும் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். தற்போது கரோனா தொற்று காரணமாக 81 வயதான ஜோ பைடன் தனது டெலாவர் இல்லத்தில் தனிமையில் ஓய்வு எடுத்து வருகிறார்.

பிரச்சாரத்துக்கு திரும்புவேன் - பைடன்: இதனிடையே ஓய்வெடுத்து வரும் ஜோ பைடன், ஜனநாயகத்தை காப்பாற்ற அடுத்தவாரம் பிரச்சாரத்துக்கு திரும்புவேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர், "குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் பேசிய டொனால்ட் ட்ரம்பின் பேச்சினை எதிர்காலத்தைப் பற்றிய இருண்ட பார்வை என்று விமர்சித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், "கடந்த இரவில் (வியாழக்கிழமை) நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க மக்கள் நிராகரித்த அதே டொனால்ட் ட்ரம்பை மீண்டும் பார்த்தனர். சுமார் 90 நிமிடங்களுக்கு மேலான உரையில் ட்ரம்ப் அவரின் சொந்த குறைகளில் மட்டுமே கவனம் செலுத்தினாரே அன்றி அமெரிக்க ஒற்றுமைக்கான திட்டம் மற்றும் வேலைக்கு செல்லும் மக்களின் வாழ்க்கையை மாற்றுவதற்கான எந்த திட்டமும் இல்லை.

ட்ரம்பின் பேச்சு எதிர்காலம் பற்றிய இருண்ட பார்வை. இதற்கு பதிலடியாக நாம் அனைவரும் கட்சியாக, தேசமாக ஒன்றிணைந்து அவரை தேர்தலில் தோற்கடிப்போம். அடுத்த வாரம் தேர்தல் பிரச்சாரத்தில் மீண்டும் பங்கேற்று டொனால் ட்ரம்பின் 2025 கொள்கையின் அச்சுறுத்தலை வெளிப்படுத்தும் நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x