Published : 12 Jul 2024 12:11 PM
Last Updated : 12 Jul 2024 12:11 PM

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு எதிராக ஐ.நா தீர்மானம்: இந்தியா புறக்கணிப்பு

ஜபோரிஜியா அணுமின் நிலையம் | கோப்புப் படம்

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு எதிரான ஐ.நா சபையின் தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது.

உக்ரைனுக்கு எதிரான தனது ஆக்கிரமிப்பை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும் மற்றும் ஜபோரிஜியா அணுமின் நிலையத்திலிருந்து தனது ராணுவம் மற்றும் பிற அங்கீகரிக்கப்படாத பணியாளர்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கோரும் வரைவு தீர்மானத்தை, உக்ரைன் கொண்டு வந்தது.

ஜபோரிஜியா அணுமின் நிலையம் உட்பட உக்ரைனின் அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பு என்ற தலைப்பிலான இத்தீர்மானத்தில், “உக்ரைனுக்கு எதிரான ஆக்கிரமிப்பை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும் மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் உள்ள உக்ரைன் பிரதேசத்தில் இருந்து தனது அனைத்து ராணுவப் படைகளையும் நிபந்தனையின்றி திரும்பப் பெற வேண்டும். ஜபோரிஜியா அணுமின் நிலையத்திலிருந்து ரஷ்யா தனது ராணுவம் மற்றும் பிற அங்கீகரிக்கப்படாத பணியாளர்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

உக்ரைனின் அனைத்து அணுசக்தி நிலையங்களிலும் அணு விபத்து அல்லது விபத்து ஏற்படும் அபாயத்தை ரஷ்யா அதிகரிக்கிறது. எனவே, அணுமின் நிலையத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உக்ரைனின் இறையாண்மையின்கீழ், அந்நாட்டு அதிகாரிகளின் முழு கட்டுப்பாட்டிற்கு உடனடியாக ஆலையை திரும்ப ஒப்படைக்க வேண்டும். உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பிற்கு எதிரான தாக்குதல்களை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த வரைவு தீர்மானத்தை ஆதரித்தன.

இதையடுத்து, 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா பொதுச் சபை, நேற்று (ஜூலை 11) இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. இந்த தீர்மானத்தின் மீது நடைபெற்ற வாக்கெடுப்பில், அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 99 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. ரஷ்யா, பெலாரஸ், ​​கியூபா, வடகொரியா, சிரியா உள்ளிட்ட 9 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன. இந்தியா, சீனா, வங்கதேசம், பூட்டான், எகிப்து, நேபாளம், பாகிஸ்தான், சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா உட்பட 99 நாடுகள் வாக்களிப்பை தவிர்த்தன.

தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்கு முன் நடந்த விவாதத்தில் பேசிய ஐநாவுக்கான ரஷ்யாவின் முதல் துணை நிரந்தர பிரதிநிதி டிமிட்ரி பாலியன்ஸ்கி, “ஒருமித்த கருத்து எட்டப்படாத, அரசியல்மயமாக்கப்பட்ட மற்றும் யதார்த்தத்தைப் பிரதிபலிக்காத பல ஆவணங்களை பொதுச்சபை ஏற்கிறது. இது துரதிர்ஷ்டவசமானது. மோதலுக்கு அமைதியான, நிலையான மற்றும் நீண்ட கால தீர்வு கண்டறியப்பட வேண்டும். ஆனால், அதற்கு மாறாக, இன்றைய தீர்மானம் மோதலை மேலும் தீவிரப்படுத்தும். எனவே, தவறு இழைக்காதீர்கள்” என குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x