Published : 18 May 2024 05:09 PM
Last Updated : 18 May 2024 05:09 PM

ஆப்கானிஸ்தானில் திடீர் வெள்ளத்தில் சிக்கி 50 பேர் பலி: பலர் மாயம்

காபூல்: ஆப்கானிஸ்தானில் பருவ மழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 50 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், மேற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோர் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை (மே 17) பெய்த பருவ மழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மக்கள் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்களில் இன்னும் பலரை காணவில்லை என கோர் மாகாண ஆளுநரின் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.

கோர் மாகாணத்தின் தலைநகரான ஃபெரோஸ் கோ உட்பட மாகாணத்தின் பல பகுதிகளிலும் பருவ மழை கொட்டித்தீர்த்தது. இதில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. நூற்றுக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்களும் சேதமடைந்துள்ளதால் இழப்புகள் அதிகம் என தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

மே 10 ஆம் தேதி பெய்த பெருமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி வடக்கு மாகாணமான பாக்லானில் 300க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்று கடந்த வாரம் தான் ஐ.நா அமைப்பு அறிக்கை வெளியிட்டது. இந்த நிலையில் நேற்று மீண்டும் வெள்ளம் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது ஆப்கானிஸ்தானில் சோகத்தை உண்டாக்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x