Published : 21 Aug 2014 10:00 AM
Last Updated : 21 Aug 2014 10:00 AM
ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் ரயில்வே அதிகாரிக்கு பெய்ஜிங் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவின் தென்மேற்கில் உள்ள குன்மிங் நகரில் ரயில்வே துறை தலைமை அதிகாரியாக இருந்த வென் கிங்லியாங், ஊழல் குற்றச்சாட்டு காரணமாக கடந்த 2011-ம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக பெய்ஜிங் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
கடந்த 2005 முதல் 2011 வரையிலான காலத்தில் வென் ரயில்வே திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை வழங்குவதற்காக சில நிறுவனங்களிடமிருந்து ரூ.20 கோடி லஞ்சம் வாங்கியது விசாரணையின்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து அவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. எனினும், 2 ஆண்டுகளுக்குப் பிறகு தண்டனை குறைக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது. அதாவது சிறையில் இருக்கும் 2 ஆண்டுகளில் நல்லவிதமாக நடந்துகொண்டால் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படும்.
முறைகேடு செய்த தொகை, சொத்துக்கள் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுவிட்டதால் அவரது தண்டனையை குறைப்பதற்கான அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஊழல், கடன் சுமை, பல்வேறு முறைகேடு என சீன ரயில்வே துறை கடும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT