Published : 09 Aug 2014 05:56 PM
Last Updated : 09 Aug 2014 05:56 PM
இராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவது எங்கு நிகழ்ந்தாலும், அதில் அமெரிக்கா தலையிடும் என்று அந்நாட்டு அதிபர் ஒபாமா தெரிவித்தார்.
இராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள், தாக்குதல் நடத்தி பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றி வருகின்றனர். இஸ்லாமிய தேசத்தை அமைக்கும் நோக்கத்தில், தற்போது இராக் தலைநகர் பாக்தாதை நோக்கி இந்த அமைப்பு தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
இதனை முறியடிக்க இராக் ராணூவம் முயன்று வருகிறது. அமெரிக்கப் படைகளும் இராக்கில், வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா கூறும்போது, " நாம் யார் என்பது அவசியமான கேள்வி இல்லை. அமெரிக்கர்களால் என்ன முடியும்? என்பது தான் கேள்வி. நம்மால் முடியும் என்பதால், நாம் அவர்களை வழி நடத்தியாக வேண்டும்.
எர்பிலில் இருக்கும் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளையும் ராணுவ ஆலோசகர்களையும் பாதுகாக்கும் நோக்கத்தோடு, அங்கு அமெரிக்கப் படைகள் அனுப்பப்பட்டுள்ளன.
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் மீது அமெரிக்க போர் விமானங்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தாக்குதலும் ஒரு குறிப்பிட்ட அளவிற்குத்தான் நடத்தப்படுகிறது. அங்கு தொடர்ந்து வான்வழித் தாக்குதல் நடத்தவேண்டும் என்பது எங்களது நோக்கம் அல்ல.
சிறுபான்மை இன மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாகிவிடக்கூடாது என்பதற்காகவும், அப்பகுதியில் உள்ள அமெரிக்க அதிகாரிகளை பாதுகாக்கவும்தான் இந்த விமான தாக்குதல் நடத்தப்படுகிறது.
இராக் நாட்டை கிளர்ச்சியாளர்கள் பிடியில் சிக்க விடாமல், அங்குள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்தாலோசித்து இந்த பிரச்சினைக்கு தக்கத் தீர்வு காண வேண்டும். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர், முன்வைக்கும் தனி இஸ்லாமிய தேசம் கோரிக்கை எந்நாளும் அனுமதிக்கப்படாது
இராக்கில் அமெரிக்கா, மனித உரிமைகள் ரீதியான உதவிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது பல பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளது அந்நாட்டில் உள்ள சிறுபான்மையினருக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT