Published : 26 Aug 2014 10:00 AM
Last Updated : 26 Aug 2014 10:00 AM

வியட்நாமில் சுஷ்மா சுற்றுப் பயணம்

வியட்நாமில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அங்கு இருநாட்டு நல்லுறவு மேம்பட வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துவார் என்று கூறப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு வியட்நாமுக்குச் சென்ற சுஷ்மா அங்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் பாம் பின் மின்னுடன் சந்திப்புகளை நடத்தவுள்ளார். மேலும் அந்நாட்டு அதிபர் த்ரோங் தான் சாங் மற்றும் பிரதமர் நுயென் தான் டங் ஆகியோரையும் சந்திக்க இருக்கிறார்.

இதுகுறித்து சுஷ்மா கூறும்போது, "பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததும், 'ஏக்ட் ஈஸ்ட் பாலிசி' எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் கிழக்கில் உள்ள நாடுகளுடன் இந்தியா நல்லுறவை மேம்படுத்த விரும்புகிறது. அந்த நாடுகளில் ஒன்று வியட்நாமும் ஆகும்.

ஒரு காலத்தில் வியட்நாமில் அரிசியை விளைவிக்க இந்தியா உதவியது. இன்று அரிசி ஏற்றுமதியில் அவர்கள் நம்மையே பின்னுக்குத் தள்ளிவிட்டார்கள். மேலும், வியட்நாமில் பல வளர்ச்சி சார்ந்த நடவடிக்கைகளுக்கு இந்தியா கோடிக்கணக்கான ரூபாய் கடனுதவியும் செய்துள்ளது" என்றார்.

தென் சீனக் கடலில் உள்ள இரண்டு எண்ணெய்க் கிணறுகளில் இன்னும் ஓராண்டுக்கு இந்தியா எண்ணெய் எடுப்பதை வியட்நாம் அனுமதித்ததைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பு சாத்தியமாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x