Published : 31 Jan 2024 01:37 PM
Last Updated : 31 Jan 2024 01:37 PM

மாலத்தீவு அரசு வழக்கறிஞர் ஹுசைன் ஷமீம் மீது கொடூர தாக்குதல்

மாலத்தீவு அரசு வழக்கறிஞர் ஹுசைன் ஷமீம்

மாலே: மாலத்தீவின் அரசு வழக்கறிஞர் ஹுசைன் ஷமீம் மீது, இன்று (புதன்கிழமை) காலை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஹுசைன் ஷமீம் மாலத்தீவின் முன்னாள் அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஷின் மாலத்தீவு ஜனநாயகக் கட்சி அரசால் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டவராவார். அவர் இன்று காலையில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர் அவர் மீது பாய்ந்து அவரை சுத்தியலால் கடுமையாக தாக்கியுள்ளார். இச்சம்பவத்தால் வழக்கறிஞரின் இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் அங்குள்ள ஏடிகே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து போலீஸார்.“வழக்கறிஞர் ஹுசைன் ஷமிம் மீது மாலே தலைநகரில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவர் ஏடிகே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கூர்மையான பொருள் கொண்டு தாக்குதல் நடத்தப்படவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.

மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறிவரும் நிலையில், மாலத்தீவு அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையில் அரசியல் சச்சரவு நீடித்து வருகிறது. இந்தப் பின்னணியில் இத்தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்துக்கும் நிலவி வரும் அரசியல் சச்சரவுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும், ஹுசைன் ஷமீம் கையாண்டு வரும் ஒரு குற்றவழக்கு தொடர்பாகவும் இந்தத் தாக்குதல் நடந்திருக்கலாம் என்றும் போலீஸார் கருதுகின்றனர்.

மாலத்தீவு நாடாளுமன்றத்தில் குழப்பம்: முன்னதாக, மாலத்தீவு நாடாளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆளும் கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நாடாளுமன்றத்துக்குள் உறுப்பினர்கள் தள்ளு முள்ளுவில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாக சமூக வலைதளங்களில் வைரலானது. இதில் மாலத்தீவுஜனநாயக கட்சி எம்பி அகமது, தேசிய மக்கள் காங்கிரஸ் எம்.பி. அப்துல்லா ஷாஹீம் ஆகியோர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் காயமடைந்த ஷாஹீம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த மோதலின்போது மாலத்தீவு ஜனநாயக கட்சி எம்.பி.ஹசன் ஜரீருக்கும் விரலில் பலத்த காயம் ஏற்பட்டது.

உச்ச நீதிமன்றத்தை நாடிய மாலத்தீவு அரசு: இந்தநிலையில், அதிபரை பதவி நீக்கம் செய்ய எதிர்கட்சிகளுக்கு வழிவகை செய்யும் நாடாளுமன்ற நிலை ஆணையின் புதிய திருத்தத்தை எதிர்த்து மாலத்தீவின் ஆளும் அரசு திங்கள்கிழமை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

முன்னதாக அதிபர் முய்சின் அரசில் முக்கிய பொறுப்புகள் வகித்து வந்த 7 பேர் கடந்த நவம்பரில் ராஜினாமா செய்தனர். ஆனால் அதற்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றுள்ள எம்டிபி கட்சி, வாக்கெடுப்பின் போது காலியாக உள்ள இடங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளக்க கூடாது என்று நாடாளுமன்ற நிலையியல் உத்தரவில் திருத்தம் கொண்டு வந்ததது. இதன்படி அதிபரை பதவி நீக்கம் செய்யும் வாக்கெடுப்பில் தற்போதுள்ள 58 எம்.பி.,க்கள் ஆதரவுக்கு பதிலாக, 54 எம்.பி.,கள் ஆதரவு இருந்தால் போதுமானது. இதனை எதிர்த்து மாலத்தீவு அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x