Published : 05 Jan 2024 12:18 PM
Last Updated : 05 Jan 2024 12:18 PM

சோமாலியா அருகே 15 இந்தியர்களுடன் சரக்கு கப்பல் கடத்தல்

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி: சோமாலியா அருகே 15 இந்தியர்களுடன் சரக்கு கப்பல் ஒன்று கடத்தப்பட்டுள்ளது. மத்திய ஆப்ரிக்காவைச் சேர்ந்த சோமாலியாவின் கடற் பகுதியில் MV LILA NORFOLK என்ற சரக்கு கப்பல் நேற்று மாலை கடத்தப்பட்டுள்ளது. இந்த கப்பலில் 15 இந்தியர்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய ஆப்ரிக்காவைச் சேர்ந்த சோமாலியாவின் கடற் பகுதியில் MV LILA NORFOLK என்ற சரக்கு கப்பல் நேற்று மாலை கடத்தப்பட்டுள்ளது. இந்த கப்பலில் 15 இந்தியர்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக இந்திய கடற்படை தெரிவித்திருப்பதாவது: "லைபீரிய நாட்டின் கொடி பறந்த MV LILA NORFOLK என்ற சரக்கு கப்பல் சோமாலியாவின் கடற் பகுதியில் நேற்று கடத்தப்பட்டதாகவும், இந்த கப்பலில் 15 இந்தியர்கள் உள்ளனர் என்றும் தகவல் கிடைத்தது. நேற்று மாலை 5 முதல் 6 மணிக்குள் இந்த கப்பல் கடத்தப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத 5 முதல் 6 பேர் வரையுள்ள நபர்கள், ஆயுதங்களுடன் வந்து கப்பலை கடத்தியதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து, இந்திய கடற்படை உடனடி பதில் நடவடிக்கையை எடுத்தது. கடத்தப்பட்ட சரக்குக் கப்பல் இருக்கும் இடத்தை நோக்கி இந்திய கடற்படை விமானம் அனுப்பப்பட்டது. அதோடு, கடற்பாதுகாப்புக்கு உதவும் ஐஎன்எஸ் சென்னை என்ற போர்க் கப்பலும் திருப்பிவிடப்பட்டது. இந்திய கடற்படை விமானம், கடத்தப்பட்ட கப்பல் இருக்கும் இடத்தை இன்று அதிகாலை கண்டறிந்து அதனை கண்காணித்து வருகிறது. மேலும், கப்பலுக்குள் உள்ளவர்களோடு தொடர்பை ஏற்படுத்தி பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தது.

இந்திய கடற்படை விமானம் கடத்தப்பட்ட கப்பலை தொடர்ந்து கண்காணித்துக்கொண்டிருக்கும் நிலையில், ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பலும் நெருங்கிவிட்டது. இந்த கடற்பிராந்தியத்தில் பாதுகாப்பை மேற்கொள்ளும் பிற அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து ஒட்டுமொத்த நிலைமையும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சர்வதேச பங்குதாரர்கள் மற்றும் நட்பு நாடுகளுடன் இணைந்து இப்பகுதியில் வணிகக் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய கடற்படை உறுதியாக உள்ளது." இவ்வாறு இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

யார் இந்த சோமாலியா கடற்கொள்ளையர்கள்? கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள சோமாலியாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அங்கு 1969-ல் முகமது சையது பார் என்பவர் தலைமையிலான புரட்சிகர கவுன்சில் ஆட்சியைக் கைப்பற்றியது. கடந்த 1980-ல் அங்கு உள்நாட்டுப் போர் வெடித்தது. சோமாலி ஜனநாயக குடியரசு, பல்வேறு கிளர்ச்சிக் குழுக்கள் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்தின. இந்த போரால் 1991-ல் முகமது சையது பார் ஆட்சி வீழ்ந்தது.

அதன்பிறகு சோமாலியாவில் பொதுத்தேர்தல் நடைபெற வில்லை. பெயரளவுக்கு ஏதோ ஓர் ஆட்சி நடக்கிறது. இது தவிர அல்-காய்தா ஆதரவு அமைப்பான அல்-சகாப், பல்வேறு நாச வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. இதன்காரணமாக இன்றளவும் சோமாலியாவில் அமைதி திரும்பவில்லை.

உள்நாட்டுப் பாதுகாப்பு, கடல் எல்லைப் பாதுகாப்பு பலவீனமாக இருப்பதால் அண்டை நாட்டு மீனவர்கள் சோமாலிய எல்லையில் அத்துமீறி மீன் பிடிக்கத் தொடங்கினர். அவர்களைத் தடுத்து நிறுத்திய உள்ளூர் மீனவர்கள், மிரட்டி பணம் பறித்தனர். அது லாபம் கொழிக்கும் தொழிலாக மாறியதால் சோமாலிய மீனவர்களின் கவனம் சரக்குக் கப்பல்கள் மீது திரும்பியது. 2005 முதல் சரக்குக் கப்பல்களைக் கொள்ளையடிக்க தொடங்கினர். பின்னர் கப்பலுடன் சேர்த்து ஊழியர்களைச் சிறைபிடித்து பிணைத் தொகை கேட்டு மிரட்டினர்.

தலைநகர் மொகதீஷுசு துறைமுகத்தில் கடற்கொள்ளையர்களுக்கு விசுவாசமான உளவாளிகள் பலர் உள்ளனர். அவர்கள் துறைமுகத்துக்கு வந்து செல்லும் சரக்கு கப்பல்கள் வருகை குறித்து தகவல் அளிக்கின்றனர். அதன்பேரில் குறிப்பிட்ட கப்பல்களைக் கொள்ளையர்கள் மிக எளிதாக கடத்திச் செல்கின்றனர் எனக் கூறப்படுகிறது.

பொதுவாக பிணைக்கைதிகளை அவர்கள் கொலை செய்வது இல்லை. பணம் கைக்கு வந்ததும் கப்பலையும் ஊழியர்களையும் விடுவித்து விடுகின்றனர். இந்த கொள்ளையை தடுக்க அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இணைந்து சோமாலிய கடல் பகுதியில் கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அதையும் மீறி சரக்கு கப்பல்கள் கடத்தப்படுவது தொடர்கதையாக நீடிக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x