Published : 02 Jan 2024 04:16 PM
Last Updated : 02 Jan 2024 04:16 PM

ஜப்பான் விமான நிலையத்தில் இரு விமானங்கள் மோதி பயங்கர தீ விபத்து: 5 பேர் பலி

டோக்கியோ: ஜப்பானில் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஹனேடா விமான நிலையத்தின் ஓடுபாதையில் இன்று (ஜன.2) கடலோர காவல்படை விமானம் மீது ஜப்பான் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மோதியதில் பயங்கர தீ விபத்துக்கு ஏற்பட்டது. இதில், 5 பேர் உயிரிழந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

டோக்கியோ ஹனேடா விமான நிலையத்தின் ஓடுபாதையில் இந்த தீ விபத்து ஏற்பட்டபோது, ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தில் 379 பயணிகள் இருந்தனர். விபத்து ஏற்பட்ட சமயத்திலேயே பயணிகள் மற்றும் பணியாளர்கள் என அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் ஹொக்கைடோவில் உள்ள நியூ சிட்டோஸ் விமான நிலையத்திலிருந்து வந்து கொண்டிருந்தது. இதையடுத்து அந்த விமானம் சி ஓடுபாதையில் தரையிறங்கியது. அதே சமயத்தில், ஜப்பான் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய சில பொருட்களுடன் கடலோர காவல்படை விமானம் ஒன்று ஓடுபாதையில் சென்று கொண்டிருந்து. அந்த விமானத்தின் மீது ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் மீது மோதியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, விமானத்தின் ஜன்னல்களில் இருந்து தீப்பிழம்புகள் வெளியேறி வருகிறது. விமான நிலைய அதிகாரிகள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். விபத்துக்கான முழுமையான காரணத்தை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான ஹனேடா விமான நிலையத்தின் கடலோர காவல்படை அதிகாரி ஒருவர், விபத்து குறித்தான விவரங்களை சரிபார்த்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், ஜப்பானில் உள்ள விமான நிலையத்தில் இது மாதிரியான மோதல் சம்பவத்தை நான் பார்த்ததில்லை என விமான ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜப்பானிய கடலோர காவல்படை விமானத்தின் இருந்த ஆறு பணியாளர்களில் 5 பேர் இறந்துவிட்டதாகவும், விமானத்தின் கேப்டனுக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. 70-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x