Published : 18 Dec 2023 10:48 AM
Last Updated : 18 Dec 2023 10:48 AM

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மருத்துவமனையில் அனுமதி?- விஷம் கொடுக்கப்பட்டதாக தகவல்

கராச்சி: நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கடும் உடல்நலக் குறைவு காரணமாக பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பையில் நிழல் உலக தாதாவாக இருந்து மும்பை குண்டுவெடிப்பின் மூளையாக செயல்பட்டவர் தாவூத் இப்ராஹிம். பின்னர் இந்தியாவிலிருந்து தப்பியோடி தற்போது பாகிஸ்தானில் தஞ்சமடைந்தார். கராச்சியில் வசித்துவருவதாக கூறப்படும் தாவூத் இப்ராஹிம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் பெண் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்ததாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், கடும் உடல்நலக் குறைவு காரணமாக கராச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தாவூத் இப்ராஹின் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. எனினும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

கராச்சியில் உள்ள அந்த மருத்துவமனையில் தாவூத் இப்ராஹிம் இரண்டு நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டதாகவும், இதனால் அங்கு போலீஸார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் தாவூத் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த தளத்தில் ஏற்கெனவே இருந்த மற்ற நோயாளிகள் அனைவரும் வேறு தளங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தாவூத் இப்ராஹிம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்த கூடுதல் தகவல்களை அவரது உறவினர்களான அலிஷா பார்கர் மற்றும் சஜித் வாக்லே ஆகியோரிடம் இருந்து பெற மும்பை போலீஸார் முயற்சி செய்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x