Published : 10 Nov 2023 06:19 PM
Last Updated : 10 Nov 2023 06:19 PM

காசாவின் மிகப் பெரிய மருத்துவமனை மீதான இஸ்ரேல் தாக்குதலில் 13 பேர் உயிரிழப்பு: ஹமாஸ் தகவல்

இஸ்ரேல் - ஹமாஸ் போர்

டெல் அவில்: காசாவின் மிகப் பெரிய மருத்துவமனையான அல்-ஷிபா மருத்துவமனை வளாகத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வரும் நிலையில், காசாவின் அல்-ஷிபா மருத்துமனை வளாகத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் டாங்கர் வாகனங்கள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இஸ்ரேல் ராணுவம் இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை. சுகாதாரத் துறையின் நிலை குறித்து காசாவில் உள்ள சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள சில புள்ளிவிவரங்களை காணலாம். அதில், "35 மருத்துவமனைகளில் கிட்டதட்ட 18 மருத்துவமனைகள் சேவையில் இல்லை. 72 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 51 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. காசாவில் உள்ள சுகாதாரத் துறை மீது 270-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடந்துள்ளன. 57 ஆம்புலன்ஸ்கள் சேதமடைந்துள்ளன; அவற்றில் 45 முற்றிலும் சேதமடைந்துள்ளன.

மேலும் அல்-ரான்டிசி மருத்துவமனை, அல்-நாஸ்ர் மருத்துவமனை, அரசு கண் மருத்துவமனை மற்றும் மனநல மருத்துவமனை ஆகிய நான்கு மருத்துவமனைகளையும் இஸ்ரேலிய படைகள் சுற்றிவளைத்துள்ளனர். இப்பகுதியில் பல பள்ளிகள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் உள்ளன. ஆயிரக்கணக்கான நோயாளிகள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் தண்ணீர், உணவு இல்லாமல் மருத்துவமனைகளுக்குள் சிக்கியிருயிருக்கின்றனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காசா நகரின் வடகிழக்குப் பகுதியில் உள்ள தனது சுற்றுப்புறத்தில் குண்டுகள் வெடிப்பதால், 32 வயதான அபு முகமது என்பவர் தனது 15 உறவினர்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் தஞ்சமடைந்தார். இது குறித்து அவர், பாதுகாப்பான இடம் எதுவும் இல்லை.எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கி ஒருமாத காலம் ஆன நிலையில் காசா உருக்குலைந்துள்ளது. அங்கு இதுவரை 10,800-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தரப்பில் இதுவர 1400 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 239 பேர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x