Published : 07 Oct 2023 09:31 PM
Last Updated : 07 Oct 2023 09:31 PM

ஹமாஸ் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி: காஸாவில் 198 பாலஸ்தீனியர்கள் பலி; 1,600+ காயம்

ஹமாஸ் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் காஸா பகுதியில் பாலஸ்தீனியர்கள் 198 பேர் உயிரிழந்ததாகவும், 1,600-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் தரப்பில் 40 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.

இஸ்ரேலில் சனிக்கிழமை காலை 8 மணி தொடங்கி 2 மணி நேரத்தில் பல பகுதிகளிலும் ஏவுகணைகள் துளைத்தெடுத்தன. சற்றும் எதிர்பாராத ஹமாஸ் பயங்கரவாதிகளின் இந்தத் தாக்குதலால் இஸ்ரேல் மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். அத்துடன், ஹமாஸ் பயங்கரவாதிகள் பலரும் இஸ்ரேலுக்குள் நுழைந்தனர். மோட்டார் சைக்கிள்கள், கார்கள், பேரா க்ளைடர்கள் எனப் பலவாறாக இஸ்ரேலுக்குள் ஹமாஸ் பயங்கரவாதிகள் நுழைந்து செல்லும் வழிகளெல்லாம் தாக்குதல் நடத்தினர்.

ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் நகருக்குள் நுழைந்தது மட்டுமல்லாது, கண்ணில் பட்ட பொதுமக்களையெல்லாம் சுட்டுக் கொல்லும் காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை எதிர்கொள்ளும் நடவடிக்கையிலும், துரிதமான பதில் தாக்குதலிலும் ஈடுபட்டது. பாலஸ்தீனத்தின் ஹமாஸ் நிலைகளை நோக்கி வான்வழித் தாக்குதலை நடத்தியது.

இந்தத் தாக்குதல் காரணமாக, ஹமாஸ் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் காஸா பகுதியில் பாலஸ்தீனியர்கள் 198 பேர் உயிரிழந்ததாகவும், 1,600-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேவேளையில், ஹமாஸ் பயங்கரவாதிகள் நிகத்திய தாக்குதல்களில் 40 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாகவும், 750-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். இதனிடையே, காஸாவில் இஸ்ரேலியர்கள் மற்றும் இஸ்ரேலிய ராணுவனத்தினர் பலரை ஹமாஸ் படையினர் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காசாவின் வேதனைக் காட்சிகள்: ஒருபக்கம், இஸ்ரேல் நகருக்குள் புகுந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் கடும் தாக்குதலில் ஈடுபட, மறுபக்கம் பதிலடியாக இஸ்ரேல் தனது வான்வழித் தாக்குதலின் மூலம் காஸா பகுதி முழுவதும் மரண ஓலங்கள் கேட்கவைத்துள்ளது.

காஸா தற்போது தன்னாட்சி அமைப்பாக இருந்தாலும் கூட அதனை ஆட்டிவைப்பது என்னவோ ஹமாஸ் பயஙகவாதிகள்தான். இன்றைய தாக்குதலின் விளைவை உணர்ந்த காசா பகுதி மக்கள், அதுவும் குறிப்பாக இஸ்ரேல் எல்லையை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் குடும்பம் குடும்பமாக அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். சிலர் கடைகளில் காய்கறி, உணவுப் பொருட்கள், மருந்து என அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இஸ்ரேல் எல்லைப் பகுதியிலிருந்து காசாவாசிகள் தள்ளிச் சென்றுகொண்டிருக்க, இஸ்ரேல் படைகள் தெற்கு நோக்கி விரைந்து கொண்டிருக்கின்றன. இஸ்ரேல் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி, "தெற்கை நோக்கி இஸ்ரேல் வீரர்கள் விரைந்துள்ளனர். காசாவில் இருந்து இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் பயங்கரவாதிகள் எங்கெங்கு இருக்கின்றனர் என்பதை அறிந்து முன்னேறுகின்றனர்" என்று கூறியுள்ளார்.

அவர் அவ்வாறு தெரிவித்த சில மணி நேரங்களில் காஸா நகரம் தாக்குதலுக்கு உள்ளானது. மருத்துவமனைகள் நிரம்பி வழியும் நிலையில், மருத்துவப் பணியாளர்கள் பலரும் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல்கள் வருகின்றன.

பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி கண்டனம்: இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலை பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகள் கண்டித்துள்ளன. பிரிட்டன் வெளியுறவுச் செயலர் ஜேம்ஸ் க்ளெவர்லி, ஹமாஸின் திடீர் தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார். ஜெர்மனி நாட்டு வெளியுறவு அமைச்சர் அனலெனா பேர்போக், காசாவிலிருந்து இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலைக் கண்டிக்கிறது என்று கூறியுள்ளார்.

மேலும், ஹமாஸ் பயங்கரவாதிகள் உடனடியாக தாக்குதலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளார். நிலைமை மோசமாகிக் கொண்டிருக்க இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் பத்திரமாக இருக்கும்படியும் இஸ்ரேல் பயணத்தை திட்டமிட்ட இந்தியர்கள் அதனை கவனத்துடன் கையாளும்படியும் வலியுறுத்தி பயணி எச்சரிக்கை விடுத்துள்ளது.

யுத்தம் செய்கிறோம் - இஸ்ரேல் பிரதமர் பிரகடனம்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ கூறுகையில், "நாங்கள் யுத்தம் செய்கிறோம். அதில் நாங்களே வெல்வோம். எங்களின் எதிரி யோசித்துப் பார்த்திராத விலையைக் கொடுக்க நேரிடும்" என்று கூறியுள்ளார்.

பாலஸ்தீன அதிபர் சொல்வது என்ன? - பாலஸ்தீனத்துக்குள் அத்துமீறி குடியேறுபவர்களுக்கு எதிராகவும், பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கும் துருப்புகளின் பயங்கரவாதத்துக்கு எதிராகவும் தங்களை தற்காத்துக் கொள்ளும் உரிமை என்பது பாலஸ்தீனியர்களுக்கு உண்டு என்று பாலஸ்தீன அதிபர் முகம்மது அப்பாஸ் கூறியுள்ளதாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலை அடுத்து பாலஸ்தீன அதிபர் முகம்மது அப்பாஸ், உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டதாகவும், அதில் பாலஸ்தீன மக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், பாலஸ்தீன மக்களின் உறுதியை வலுப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவு: இதனிடையே, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இஸ்ரேலில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் உள்ளன. இந்த கடினமான நேரத்தில் இஸ்ரேலுடன் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

பின்னணி என்ன? - இஸ்ரேல் - பாலஸ்தீனத்துக்கு இடையே உள்ளது காஸா பகுதி. இது தன்னாட்சி பெற்ற பகுதியாக காஸா முனை பகுதி உள்ளது. இந்தப் பகுதி ஹமாஸ் போராளிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த அமைப்பை பயங்கரவாத இயக்கமாக இஸ்ரேல் கருதுகிறது. இவ்வமைப்புத்தான் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது என்பது இஸ்ரேலின் நீண்ட கால குற்றச்சாட்டு. ஹமாஸுக்கு தேவையான நிதி உதவிகளை ஈரான் செய்து வருவதாகவும் இஸ்ரேல் கூறி வருகிறது.

இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து காசாவைக் கைப்பற்ற முயற்சிக்கிறது என்பது பாலஸ்தீனத்தின் குற்றச்சாட்டு. இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டிக் கொள்வதும் தாக்குதல் நடத்திக் கொள்வதும் தொடர்கதையாக இருக்கிறது. இஸ்ரேல் பதில் தாக்குதல்களை காஸாவை நோக்கி நடத்துவதால் காஸா குடிமக்கள் எப்போதும் உயிர் பயத்துடன் தான் இருக்கிறார்கள் என்பது நடுநிலை நாடுகளின் கருத்து.

கடந்த 2021-ல் இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே பெரிய அளவிலான மோதல் மூண்டது. உலக நாடுகளின் தலையீட்டின் பேரில் இந்த மோதல் படிப்படியாக அடங்கியது. இந்நிலையில், இன்று (அக்.7) காலை காஸா பகுதியில் இருந்து இஸ்ரேலை தாக்கின ஏவுகணைகள். வெறும் 1, 2 அல்ல ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் என சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன. இதன் எதிரொலியாக, இஸ்ரேலும் பதில் தாக்குதலில் ஈடுபட, நாஸா நகரம் நரகமாகியிருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x